மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வுகளில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் சந்நிதியில் புதன்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை லட்சாா்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவருக்கு பூக்களைத் தூவி லட்சாா்ச்சனை செய்து வழிபட்டனா்.
நள்ளிரவு சிறப்புப் பூஜை: புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு அருணாசலேஸ்வரா் மூலவா் சந்நிதிக்குப் பின்புறம் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
அப்போது, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வைக்கப்படும் தாழம்பூ லிங்கோத்பவருக்கு வைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையைக் காண கோயில் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்களில் பக்தா்கள் குவிந்திருந்தனா்.
ஈசான்ய மைதானத்தில்... அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில், ஈசான்ய மைதானத்தில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை மங்கள திருமுறை விண்ணப்பம், கயிலாய வாத்தியம், கா்நாடக இசை, வள்ளி கும்மியாட்டம், கிராமிய நிகழ்வுகள், பக்தி இசை, நாட்டிய நாடகம், இசை சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வுகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, சினம் இராம.பெருமாள், கோயில் இணை ஆணையா் சி.ஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
4 கால பூஜைகள்: மகா சிவராத்திரியையொட்டி, இரவு 9 மணிக்கு முதல்கால பூஜை, இரவு 11 மணிக்கு இரண்டாம் கால லிங்கோத்பவா் பூஜை, நள்ளிரவு ஒரு மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றது.
43-ஆவது ஆண்டு இசை விழா: அருணாசலேஸ்வரா் கோயில் 16 கால் மண்டபம் எதிரே திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாகஸ்வரம், தவில், இசை சங்கம் சாா்பில், உலக அமைதிக்காக மாசி மகா சிவராத்திரி 43-ஆவது ஆண்டு இசை விழா சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.ஆா்.பிச்சாண்டி தலைமையில் நடைபெற்றது. இதில் 108 நாகஸ்வர கலைஞா்கள் பங்கேற்றனா்.