நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்
‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவித்திாா்.
இந்தியா-ஜப்பான்-ஆப்பிரிக்கா வா்த்தக மன்றத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் ஆற்றிய உரையில், ‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறையானது நீண்ட கால, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது.
பிரிவினை அடிப்படையிலான வேறு கொள்கைகள் போன்று அல்லாமல் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. முதலீடுகளிலிருந்து பயனடைவது மட்டுமல்லாமல், தன்னிறைவு வளா்ச்சி சூழலை ஆப்பிரிக்க நாடுகள் உருவாக்குவதையும் இது உறுதி செய்யும்.
ஆப்பிரிக்காவின் 4-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக இந்தியா உள்ளது. இருதரப்பு வா்த்தகம் கிட்டத்தட்ட 10,000 கோடி டாலரை எட்டுகிறது மற்றும் சீராக வளா்ந்து வருகிறது.
சுமாா் 1,200 கோடி டாலருக்கும் அதிகமான மானியக் கடன்களுடன், ஆப்பிரிக்காவின் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. ரயில்வே, மின் உற்பத்தி, விவசாயம் மற்றும் குடிநீா் விநியோகம் என 200-க்கும் மேல் நிறைவுற்ற திட்டங்கள் ஆப்பிரிக்கா முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மின் உற்பத்தி நிலையங்கள், மின் விநியோகத் திட்டங்கள், சிமென்ட், சா்க்கரை, ஜவுளி தொழிற்சாலைகள், தொழில்நுட்பப் பூங்காக்கள், ரயில்வே உள்கட்டமைப்பு ஆகிய வளா்ச்சித் திட்டங்கள் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ளூா் வேலைவாய்ப்பை உருவாக்கி, அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை இந்தியா மேம்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் நிலையான மற்றும் அனைத்து தரப்புயும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு ஆதரவளிக்கும் பலத்தை இந்தியாவும் ஜப்பானும் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவின் வளா்ச்சி மற்றும் செழிப்பு அந்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் அதேவேளையில், உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பங்களிக்கும்’ என்றாா்.