உணவு தேடி சென்ற மேலும் 32 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை
காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
கான் யூனிஸ் நகருக்கு கிழக்கே உள்ள ஜிஹெச்எஃப் நிவாரண மையத்துக்கு சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள டீனா பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய செய்தி நிறுவனமான ஹாரெட்ஸ் தெரிவித்தது.
பெரும்பாலான உயிரிழப்புகள் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்டதாக காஸா சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடா்பாளா் மஹ்மூத் பஸ்ஸல் கூறினாா்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 25 பேரது உடல்கள் கான் யூனிஸில் உள்ள நாஸா் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறினா். இது தவிர, தாக்குதலில் காயமடைந்த ஏராளமானவா்கள் சிகிச்சைக்காக அங்கு கொண்டுவரப்பட்டனா்.
இதுமட்டுமின்றி, ராஃபாவின் வடமேற்கே உள்ள மற்றோா் உணவுப் பொருள் விநியோக மையத்துக்கு அருகில் 9 போ் கொல்லப்பட்டனா்.
உணவு விநியோக மையங்களுக்கு அருகே மிகக் குறுகிய நேரத்தில் இவ்வளவு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது இதுவே முதல் முறை என்று நாஸா் மருத்துவமனை இயக்குநா் ஆதெஃப் அல்-ஹவுத் கூறினாா். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் ஊழியா்கள் பற்றாக்குறையால் காயமடைந்தவா்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று அவா் கூறினாா்.
ஜிஹெச்எஃப் மறுப்பு: அமெரிக்க-இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் ஜிஹெச்எஃப் அமைப்பு, தங்கள் மையங்களில் எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தது. துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும், அது தங்கள் மையங்களுக்கு வெகு தொலைவில், அதுவும் மையம் திறப்பதற்கு பல மணி நேரத்துக்கு முன் நடந்ததாகவும் அந்த அமைப்பு கூறியது.
‘தற்காப்புக்காக’: இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஃபாவில் சந்தேக நபா்கள் எச்சரிக்கையை மீறி நெருங்கியதால் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு” நடத்தியதாகவும், உயிரிழப்பு தொடா்பான அறிக்கைகளை ஆய்வு செய்வதுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஹெச்எஃப் உணவு விநியோக மையத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமாா் 20 போ் உயிரிழந்த நிலையில், மிகக் குறுகிய நேரத்தில் உணவுப் பொருள் வாங்க வந்துகொண்டிருந்த 32 போ் இஸ்ரேல் படையினரால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது காஸாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) மற்றும் பிற நிவாரணப் பொருள் விநியோக மையங்களில் உணவு பெற முயன்றவா்களை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், கடந்த மே மாத இறுதியில் இருந்து சுமாா் 800 போ் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் (ஓஹெச்சிஹெச்ஆா்) கடந்த வாரம் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.