செய்திகள் :

காலையில் தூய்மைப் பணியாளர், மாலையில் ஆட்டோ ஓட்டுநர்: பிள்ளைகளுக்காகப் போராடும் இந்திராணி!

post image

வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் அருகே உள்ள ஒரு தெருவில் வசித்து வருகிறார், இந்திராணி. வாழ்வாதாரத்துக்கான தீர்க்கமான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அவருடன் சில நிமிடங்கள் பேசினாலே, வாழ்க்கையை எதிர்கொள்ளும் அவரது மன உறுதி நம்மை வியக்க வைக்கிறது.

“அம்மா வீடு பக்கத்துலதான் இருக்கு. ஆனா, நானும் என் பசங்களும் தனியாத்தான் இருக்கோம். யாராயிருந்தாலும் நம்மள நாமதான் பாத்துக்கணும்” என்று இயல்பாகச் சொல்கிறார்.

அவரது அந்த ஒரு வார்த்தையிலேயே, பல வருடப் போராட்டங்களின் சுவடுகள் தெரிகின்றன.

கணவரைப் பிரிந்து வாழும் இந்திராணி, பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மகளையும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகனையும் தனியாக வளர்த்து வருகிறார்.

இந்திராணி

“என் பசங்க நல்லா படிக்கணும். அவங்களுக்கு நான் சந்திச்ச கஷ்டம் வரக் கூடாது. அதுதான் என் ஆசை” என்று கூறும்போது அவரது குரலில் தாய்மையின் உறுதி ஒலிக்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஒரு பள்ளியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். காலை முதல் மதியம் வரை பள்ளியில் வேலை. ஆனால், அந்தச் சம்பளம் மட்டும் குடும்பத்தை நடத்தப் போதவில்லை.

“வாடகை வீடு, பசங்களோட படிப்புச் செலவு, வீட்டுச் செலவு... எல்லாத்தையும் சமாளிக்கணும். அதனால பார்ட் டைம் வேலையும் தேடினேன்,” என்கிறார்.

ஏமாற்றமும் புதிய துணிச்சலும்

கூடுதல் வருமானத்திற்காகப் பல இடங்களில் வேலை செய்திருக்கிறார். ஆனால், அங்கு கிடைத்தது கசப்பான அனுபவங்கள் மட்டும்தான்.

“இரண்டு, மூணு மாசம் வேலை செஞ்சிருக்கேன். சம்பளம் தர்றோம்னு சொல்லிட்டு கடைசில கொடுக்கவே மாட்டாங்க. நிறைய தடவை ஏமாந்திருக்கேன்,” என்று அவர் கூறுகிறார்.

அப்போதுதான் அவருக்குள் ஒரு தீர்க்கமான முடிவு உருவாகியிருக்கிறது: “அடுத்தவங்களை நம்பி இருந்தா நமக்கு முன்னேற்றம் இருக்காது. நாமளே ஏதாவது செய்யணும்னு தோணிச்சு.” அந்த எண்ணமே அவரை ஆட்டோ ஓட்டுநராக மாற்றியது.

ஆட்டோ ஓட்டுநராகப் புதியப் பயணம்

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்டோ ஓட்டுநர் உரிமம் (Driving License) வாங்கியிருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் முழுநேரமாக அந்தத் தொழிலில் இறங்கியுள்ளார்.

“ஆட்டோ ஓட்டுறது பெண்களுக்குக் கஷ்டமா இல்லையா?” என்று கேட்டபோது, சிரித்தபடியே பதிலளித்தார்.

“எந்த வேலையிலயும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். நான் செய்யாத வேலையே இல்லை. கஷ்டத்தைப் பாத்து பயந்தா வாழ்க்கை ஓடாது. அதனால துணிஞ்சு இறங்கிட்டேன்.”

இந்திராணி

மதியம் பள்ளி வேலையை முடித்துவிட்டு, ஆட்டோவை எடுத்துக்கொண்டு சாலைக்கு வருகிறார். இரவு 10 மணி வரை ஆட்டோ ஓட்டுகிறார். “மதிய நேரத்துல ஆர்டர் அதிகமா வராது. மாலை நாலு மணிக்கு மேலதான் கொஞ்சம் வேலை இருக்கும்,” என்கிறார்.

ஆட்டோவையும் தவணை முறையில்தான் வாங்கியிருக்கிறார், இந்திராணி. “மாதம் 7,500 ரூபாய் கட்டணும். சில நேரம் வருமானம் குறையும்போது பயமா இருக்கும். ஆனா, கட்டியே ஆகணுமே,” என்று சொல்லும்போது முகத்தில் லேசான சோர்வு தெரிகிறது. ஆனால், அந்தச் சோர்வை விட அவரது கண்களில் இருக்கும் நம்பிக்கை பெரிதாக இருக்கிறது.

``நான் இப்படி தனியா கஷ்டப்படுறது எல்லாமே என் பசங்களுக்காகத்தான். அவங்க நல்ல நிலைக்கு வரணும். அதுக்காக இன்னும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சமாளிப்பேன்,” என்கிறார் மனஉறுதியுடன். அந்த வார்த்தைகளில் ஒரு தாயின் தியாகமும், உழைப்பும், நம்பிக்கையும் ஒளிந்திருந்தன.

பள்ளியில் தூய்மைப் பணியாளராகவும், சாலையில் ஆட்டோ ஓட்டுநராகவும் உழைக்கும் இந்திராணியின் கதை, சுயசார்புடன் வாழத் துடிக்கும் பல பெண்களுக்கு ஒரு நம்பிக்கையின் ஒளிவிளக்கு!

- அ.விமலா

எவரெஸ்ட்டில் நடந்த அதிசயம்; இறந்துவிட்டார் என நினைத்த வழிகாட்டி 6 நாள்களுக்குப் பின் வந்தார்!

உறைபனி, மிகக் குறைந்த ஆக்சிஜன் அளவு கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் ஆபத்தான பகுதியில், 6 நாள்கள் தனியாகப் போராடி, உயிருடன் மீண்டிருக்கிறார் ஒரு நேபாள மலையேற்ற வழிகாட்டி. எவரெஸ்ட் வரலாற்றிலேயே இதுவரை நடந்திர... மேலும் பார்க்க

`இந்த தொழில் மேல இருக்குற பாசத்துலதான் விடாம செஞ்சுட்டு இருக்கேன்'- ஒரு பானைக் கலைஞனின் கதை!

மண்ணில் தொடங்கும் ஒரு வாழ்க்கை:மண்ணுக்கு உயிர் இல்லை என்பார்கள். ஆனால் அந்த மண் ஒரு கலைஞனின் கைகளில் சுழலும்போது அது ஒரு பானையாக மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாகவும் மாறுகிறது.அந்த மண்ணோடு அர... மேலும் பார்க்க

'எத்தனை குழந்தைங்க, எத்தனை முறை வந்தாலும் பால் இலவசம் தான்' - நேயம் பேசும் நெல்லை சந்திரா பேக்கரி

'அந்த மனசு தான் சார் கடவுள்...' என்பதற்கு ஏற்ப திருநெல்வேலி, நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் சந்திரா பேக்கரியில் பசியோடு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பால் கொடுத்து வருகிறார், பேக்க... மேலும் பார்க்க

15 வயதில் இனவெறியை எதிர்த்து நின்ற க்ளாடெட் கோல்வின்; அமெரிக்க சட்டத்தையே மாற்றியவரின் கதை தெரியுமா?

ஒவ்வொரு நாளும் சிறப்பாகத் தொடங்க நமக்கு ஒரு மோட்டிவேஷன் தேவைப்படுகிறது. உலகமே எதிர்த்து நின்றாலும், "நான் செய்வது சரி, என் உரிமைக்காக நான் நிற்பேன்" என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தைரியம் அந்த நாளுக... மேலும் பார்க்க

“கோர்ட்ல கூட குழந்தையை திரும்பிப் பார்க்காத அம்மா… மகளுக்காக வாழும் அப்பா”

"வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் சவாலாகத்தான் இருக்கு. உடல் அளவுலேயும், மனசளவுலேயும் சோர்ந்து போயிட்டேன். ஆனா, என் பொண்ணுக்காக நான் வாழணும். வாழ்ந்தே ஆகணும். அவளுக்கு அப்பாங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய... மேலும் பார்க்க

கைமாறாக வாங்கிய பணம்; ரூ.1500-ஐ திருப்பிக் கொடுக்க நண்பரைத் தேடி அலையும் 84 வயது முதியவர்!

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன். 84 வயதான இந்த முதியவர், கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார். கோவையைச் சேர்ந்த இவரின் நண்பரான பால்சாமி என்பவர், கோவில்பட்டி கருவ... மேலும் பார்க்க