எல்-நினோ தாக்கம்... அதிகரிக்கும் மாரடைப்பு நிகழ்வுகள்! - பாதுகாத்துக்கொள்வது எப்...
கிள்ளியூர்: காங்கிரஸ் அமைச்சர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த தவெக வேட்பாளர் மனு; கூட்டணியில் குழப்பம்
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில்கூட த.வெ.க வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மூன்றாம் இடத்திலும், மீதமுள்ள 5 தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தையும் பிடித்தது த.வெ.க. அதே சமயம் காங்கிரஸ் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் வென்றது. கிள்ளியூர் தொகுதியில் 1,311 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றது. த.வெ.க கூட்டணியில் காங்கிரஸ் இணைந்ததை அடுத்து, கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக ஆன பிறகு, த.வெ.க மேற்கு மாவட்டச் செயலாளர் சபினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருந்தார் ராஜேஷ்குமார். இந்த நிலையில் கிள்ளியூர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும், சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் த.வெ.க சார்பில் போட்டியிட்ட சபின் தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். த.வெ.க கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளரும், கிள்ளியூர் தொகுதியில் வேட்பாளருமாகப் போட்டியிட்ட சபின், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
`கடந்த மே மாதம் 4-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் பெரும் முரண்பாடுகள் இருந்தது. சுமார் 4,500 தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில், வெறும் 2,500 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அப்போதே முறையிட்டும், இறுதி முடிவுக்கு முன்னதாகச் சரி செய்யப்படும் என அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) செயல்பாட்டிலும் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. குறிப்பாக, வாக்குச்சாவடி எண் 169-ல் இருந்த இயந்திரத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய நேரம் காலை 5:45 மணி எனக் காட்டியது. இது இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதேபோல் வாக்குச்சாவடி எண் 76-ல் இருந்த இயந்திரத்திலும் பதிவான வாக்குகளைச் சரிபார்ப்பதில் சிக்கல்கள் இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் 18 முதல் 22 வரையிலான சுற்றுகள் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றின் முடிவுகளையும் தனித்தனியாக அறிவிக்காமல், பல சுற்றுகளை ஒன்றிணைத்து ஒட்டுமொத்தமாக அறிவித்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.

வேட்பாளர் மற்றும் அவரது முகவர்கள் எழுப்பிய நியாயமான ஆட்சேபனைகளுக்குத் தேர்தல் அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்காமல் அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்தது, ஜனநாயகத்திற்கு எதிரானது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட 76 மற்றும் 169 ஆகிய வாக்குச்சாவடிகளில் உடனடியாக மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். மற்ற இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் ஒருமுறை முறையாக மறு எண்ணிக்கை செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையையும், நேர்மையையும் உறுதி செய்ய, தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்."
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் அமைச்சரின் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்தும்படி தேர்தல் கமிஷனுக்கு த.வெ.க வேட்பாளர் மனு அளித்துள்ளது, இரு கட்சி நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.







.jpeg)










