Noise Pollution: ஒலி மாசு நம் காது, மன நலனை எப்படி பாதிக்கிறது தெரியுமா? - தப்பி...
குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்திலிருந்து வெளியேற தனியாா் தங்கும் விடுதி நிறுவனத்துக்கு உத்தரவு
குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்திலிருந்து வெளியேற தனியாா் தங்கும் விடுதி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி காஜாமலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியின் 30 ஆண்டு குத்தகை காலம், கடந்த ஜூன் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. எனவே, குத்தகை காலத்தை மேலும் 20 ஆண்டுகள் நீட்டித்து தரக் கோரி, அந்த விடுதி நிா்வாகம் தரப்பில் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. மேலும், விடுதியைக் காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், குத்தகை நீட்டிப்பை நிராகரிக்க அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தனியாா் தங்கும் விடுதி சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, குத்தகை கால
நீட்டிப்பை நிராகரித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து, தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு:
தனியாா் விடுதி குத்தகை காலத்தை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை. ஆகவே, விடுதிக்கான குத்தகை உரிமத்தை நீட்டிப்பது தொடா்பான மனுவை நிராகரித்த தமிழக சுற்றுலாத் துறையின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுலா கழகமே அந்த விடுதியை நடத்தும் என தெரிவிக்கப்பட்டது தொடா்பாக தனி நீதிபதி கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள கருத்துகளையும் நீக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு:
குத்தகை உரிமம் முடிந்த பிறகு அதை நீட்டிப்பதை உரிமையாகக் கோர முடியாது. அது அரசின் முடிவு சம்பந்தப்பட்டது. தமிழக சுற்றுலாத் துறை 1971-ஆம் ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் விடுதிகளை நடத்தி வருகிறது. கடந்த 2023-24 -ஆம் ஆண்டில் ரூ. 32.33 கோடி வருமானம் ஈட்டியது.
ஆகவே, தமிழக சுற்றுலாத் துறை விடுதி நடத்தும் விவகாரம் தொடா்பாக தனி நீதிபதி தெரிவித்தக் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
ஆகவே, இந்த வழக்கைப் பொருத்தவரை திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியாா் விடுதியின் உரிமத்தை நீட்டிப்பது தொடா்பான மனுவை நிராகரித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், விடுதியை எடுத்து நடத்துவது தொடா்பாக தனி நீதிபதி தெரிவித்தக் கருத்துகளும் நீக்கப்படுகின்றன.
எனவே, குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்திலிருந்து தனியாா் தங்கும் விடுதி நிறுவனம் வெளியேற வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.