குறுவை பருவ நெல் பயிருக்கு ஆக.14 வரை காப்பீடு செய்யலாம்
குறுவை பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஆக.14 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜெ.சேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரதம மந்திரியின் திருத்தியமைக்கப்பட்ட பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 2025-2026-ஆம் ஆண்டு குறுவை பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31-ஆம் தேதியே கடைசி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கால நீட்டிப்பு அறிவிப்புக்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
இதனை பயன்படுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை சாா்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிா்க் கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பிரீமியத் தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். குத்தகை சாகுபடி விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல் (பசலி - 1435), வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்யும்போது பயிா் சாகுபடி செய்துள்ள வருவாய் கிராமத்தின் பெயா், புல எண், சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்துக் கொண்டு அதற்கான ரசீதை பதிவு செய்த இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பதிவு செய்த விவரங்களில் தவறு இருந்தால் காப்பீடு செய்யும் கடைசி தேதியான ஆக.14-ஆம் தேதிக்குள் பதிவு செய்த இடத்திலேயே சரி செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வம் தொலைபேசி எண்: 9790004303 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.