சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்! மெரினா கடற்கரையில் ஒரு ரவுன்ட்அப்! | Album
சொதப்பும் அரசு செயலிகள்... சரிசெய்யுமா விஜய்யின் புதிய அரசு?
புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. இளம் அமைச்சரவை அமைந்துள்ளது. இளைஞர்கள் பெருமளவு ஆதரவளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த அரசு இந்த மக்கள் பிரச்னைகளுக்கு இனி தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளைத் தரும் என்ற நம்பிக்கையுடன் வாக்காளர்கள் அரசை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
தமிழக அரசைப் பொறுத்தவரை, அரசு நிர்வாக சேவைகளை டிஜிட்டல் மயமாக்க பல்வேறு முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி 2018-ஆம் ஆண்டிலேயே ‘நம்ம சென்னை’ செயலியை அறிமுகப்படுத்தியது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிமைப் பிரச்னைகளை நேரடியாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டது. சாலைகளில் உள்ள பள்ளங்கள், குப்பை அகற்றம், தெருவிளக்குப் பழுதுகள், மழைநீர் தேக்கம், கொசுத் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளை புகைப்படங்களுடன் பதிவு செய்யும் வசதி இதில் உள்ளது. மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், மொபைல் மூலமாகவே புகார் அளிக்க முடிவது இதன் முக்கிய அம்சமாகும். மேலும், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல மாநகராட்சி சேவைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மக்கள் பட்டியலிடும் பிரச்னைகள்
நல்ல முன்னெடுப்பாக இருந்தாலும், நடைமுறையில் இந்தச் செயலி எதிர்பார்த்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை. பல பயனர்கள் தொடர்ந்து சில முக்கிய குறைகளை முன்வைத்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
பல நேரங்களில், பிரச்னை முழுமையாக சரிசெய்யப்படாமலேயே புகார்கள் “Resolved” எனக் குறிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், புகார் அளித்தவர்களின் நம்பிக்கை குறைந்து, மீண்டும் செயலியைப் பயன்படுத்தத் தயங்கும் நிலை உருவாகிறது.
ஒரு புகார் எந்த அதிகாரியிடம் சென்றுள்ளது, எவ்வளவு காலத்திற்குள் அது தீர்க்கப்பட வேண்டும், தாமதமானால் யாரிடம் மேல்முறையீடு செய்யலாம் போன்ற தகவல்கள் தெளிவாக வழங்கப்படுவதில்லை. இதனால், புகார் அளித்தவர்கள் தங்களின் கோரிக்கையின் நிலையை கண்காணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
புகார் அளிப்பவர்களின் தகவல்கள் களப்பணியாளர்களுக்குத் தெரியவருகின்றன என்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் எழுந்துள்ளன. இதனால், சிலர் புகார் அளிக்கவே தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
செயலியின் பயனர் அனுபவம் (User Experience) இன்னும் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. புகார் பதிவேற்றம், புகைப்படங்களை இணைத்தல், புகார்களின் நிலையைப் பின்தொடருதல் போன்ற அம்சங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் OTP வருவதிலேயே சிக்கல் இருப்பதாக சொல்கிறார்கள்.
கூகுள் பிளே ஸ்டோரில் 2.9 ஸ்டார் ரேட்டிங்கும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெறும் 1.7 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே இந்தச் செயலி பெற்றுள்ளது. குறிப்பாக, ஐபோன் பயனர்கள் பலர் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு செயலி மோசமாக செயல்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இதே போன்று, சாலைகள் தொடர்பான புகார்களுக்கு 'நம்ம சாலை’, குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகளுக்கு ‘சென்னை குடிநீர்’ உள்ளிட்ட பல்வேறு செயலிகள் கடந்த அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இவற்றிலும் இதேபோன்ற சிக்கல்கள் இருப்பதாக பயனர்கள் கூறுகின்றனர். மேலும், ஒவ்வொரு பிரச்னைக்கும் தனித்தனி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டியிருப்பதே பொதுமக்களுக்கு கூடுதல் சிரமம்தான்.
இதற்கு மாறாக, பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில், ஆட்டோ மற்றும் கேப் சேவைகள் உள்ளிட்ட சென்னை நகரின் பல்வேறு போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்த 'சென்னை ஒன்’ செயலி சமீபத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் எளிமையான வடிவமைப்பும், பல சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் திறனும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய், ‘வெற்றி தமிழ்நாடு’ என்ற சூப்பர் செயலியை அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். மக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியத்தை குறைக்கும் வகையில், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை மொபைல் மூலமாகவே பெற முடியும் என அந்த வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒரே செயலியில் ஒருங்கிணைக்க முடிந்தால், அது உண்மையிலேயே பயனுள்ள தீர்வாக அமையும். மக்கள் பிரச்னையை மட்டும் பதிவு செய்தால் போதும்; அது எந்தத் துறைக்குச் செல்ல வேண்டும் என்பதை செயலியே தானாகக் கண்டறியும் வகையில் அது வடிவமைக்கப்பட வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் சில அம்சங்களையும் குறிப்பிடுகிறேன்.

Anonymous Complaint வசதி
புகாரளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் அதிகாரிகளுக்குக் கூட தெரியாமல் பாதுகாக்கும் வசதியை அறிமுகப்படுத்தலாம். இது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
Ward Performance Dashboard
ஒவ்வொரு வார்டிலும்:
எத்தனை புகார்கள் வந்துள்ளன?
எத்தனை புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன?
சராசரி தீர்வு நேரம் என்ன?
எந்த வார்டு சிறப்பாகச் செயல்படுகிறது?
என்பதை பொதுமக்கள் நேரடியாகப் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படலாம்.
AI மற்றும் GPS சரிபார்ப்பு
புகார் தீர்க்கப்பட்டதாகக் கூறப்படும் போது, அதே இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் GPS தரவுகளை அடிப்படையாகக் கொண்டு AI மூலம் சரிபார்க்கலாம். இதன் மூலம் தவறான “Resolved” பதிவுகளை குறைக்க முடியும்.
குடிமக்கள் ஒப்புதல் கட்டாயம்
புகார் அளித்த நபர், “பிரச்னை தீர்ந்துவிட்டது” என்று உறுதிப்படுத்திய பிறகே அந்தப் புகார் முடிக்கப்பட்டதாகக் கருத வேண்டும்.
சமூக ஊடகங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், அரசு நிர்வாக செயலிகள் எப்படி இருக்க வேண்டும், இப்படியெல்லாம் அம்சங்கள் வரலாமே என இளைஞர்கள் பலரும் தங்கள் யோசனைகளைப் பகிர்ந்து வருகின்றனர். ‘வெற்றி தமிழ்நாடு’ செயலிக்கான வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்தும் பல்வேறு மாதிரிகளை பதிவிடுகிறார்கள். அவற்றை தொகுத்து, நடைமுறைக்கு ஏற்ற வடிவம் கொடுத்தால், புதிய அரசு ஒரு சிறந்த டிஜிட்டல் நிர்வாகத் தளத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கெனவே இருக்கும் ‘நம்ம சென்னை’ போன்ற செயலிகள் நல்ல தொடக்க முயற்சிகளாக இருந்தாலும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, தனியுரிமை பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் ஆகியவை இல்லாமல் அவற்றின் முழுத் திறன் வெளிப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகமும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால், இந்த முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். அதற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்களிடையே அதிகமாக உள்ளது.
அரசு நிர்வாகம் தொடர்பான செயலிகள் குறித்து உங்களுக்கு இருக்கும் கருத்துகளை கமெண்டில் பதிவிடுங்கள்.!
















