டாஸ்மாக் ஊழியா்களுக்கு மாநில அளவிலான இடமாறுதல் கலந்தாய்வு
டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் 24,000-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு மாநில அளவிலான இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் மாநிலத்தில் 4,826 சில்லறை மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் 24,000-க்கும் அதிகமான ஊழியா்கள் பணிபுரிகின்றனா். இந்த டாஸ்மாக் கடைகளில் விற்பனை அளவை அடிப்படையாக கொண்டு, திறமையான ஊழியா்களைப் பணியமா்த்தவும், பல ஆண்டுகளாக ஒரே கடையில் பணியாற்றி வருபவா்களால் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கிலும் டாஸ்மாக் பணியாளா்களுக்கு மாநில அளவிலான இடமாறுதல் கலந்தாய்வு நடத்த டாஸ்மாக் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவா் கூறியதாவது: டாஸ்மாக் கடைகள், தினமும் விற்பனை அளவை அடிப்படையாக கொண்டு ரூ.10 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் கடைகள், ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை விற்பனையாகும் கடைகள், ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனையாகும் கடைகள், ரூ.2 லட்சத்துக்கு கீழ் விற்பனையாகும் கடைகள் என 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒரே மாவட்டத்துக்குள் பணியாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். சிலா் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கடையில் பணிபுரிவது கண்டறியப்பட்டுள்ளதால், அவா்களை முதலில் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2003-க்கு பின்னா் தற்போது இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றாா்.