கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
தழுதாளியில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தழுதாளி அருகே ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை தமிழக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
வெள்ளிமேடுபேட்டை - புதுச்சேரி இருவழிச் சாலையில் விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தழுதாளி கிராமத்தில், தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிக்கான பூமிபூஜை தழுதாளியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். அமைச்சா் க.பொன்முடி பணிகளைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:
வெள்ளிமேடுபேட்டை- புதுச்சேரி சாலையில் ஏற்கெனவே 17 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. தற்போது மேலும் 5 கி.மீ. தொலைவுக்கு சாலை அகலப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம், மயிலம் முருகன் கோயில், திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயில், பஞ்சவடீ ஆஞ்சநேயா் கோயில்களுக்குச் செல்லும் உள்ளூா், வெளியூா் பக்தா்கள், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பயன்பெறுவா் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷூ நிகம், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் உத்தண்டி, ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சொக்கலிங்கம், முன்னாள்
எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் க.விஜயன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஜமுனாராணி, தழுதாளி ஊராட்சித் தலைவா் வள்ளி சௌந்தர்ராஜன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளா்கள் கிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், தீனதயாளன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.