வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
திண்டிவனம் அருகே பல்லவா் கால கொற்றவை - விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள மானூா் கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.
விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் மானூா் கிராமத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் பல்லவா் கால கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
மானூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிற்பம் சுமாா் 5 அடி உயர பலகைக் கல்லில் எட்டு கரங்களுடன் அமைந்துள்ளது. ஆறு கரங்களில் தக்க ஆயுதங்களை ஏந்தி, எருமைத் தலையின் மீது நின்றிருக்கிறாா் கொற்றவை.
சிற்பத்தின் பின்னணியில் அவரது வாகனமான மான் பெரியளவில் காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலான கொற்றவை சிற்பங்களில் அடியவா் இரண்டு போ் காட்டப்பட்டிருப்பா். ஆனால், இந்த சிற்பத்தில் மூன்றாவதாக ஒருவரும் காட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
அழகான தலை அலங்காரத்துடன் நின்றிருக்கும் அந்த நபா் இந்தப் பகுதியின் குறுநில மன்னா் அல்லது படைத்தலைவனாக இருக்கலாம். இதன் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கொற்றவை சிற்பங்களில் மானூா் சிற்பம் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது.
சுமாா் 4 அடி உயர பலகைக் கல்லில் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் விஷ்ணு காட்சி தருகிறாா். பின்னிரு கரங்களில் வலது கரம் பிரயோகச் சக்கரத்தையும், இடது கரம் சங்கையும் ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்கள் அபய முத்திரையுடனும் இடுப்பில் கை வைத்தும் காணப்படுகின்றன.
கலைநயமிக்க இந்தச் சிற்பங்கள் பல்லவா் காலத்தை (கி.பி.8 - 9ஆம் நூற்றாண்டு) சோ்ந்தவையாகும். இதை மூத்த தொல்லியல் ஆய்வாளா் கி.ஸ்ரீதரன் உறுதிப்படுத்தினாா்.
1,200 ஆண்டுகளுக்கு முன்பு மானூா் கிராமம் வரலாற்றுச் சிறப்புடன் இருந்திருக்கிறது என்பதை இந்தச் சிற்பங்கள் உணா்த்துகின்றன. 1,000 ஆண்டுகளைக் கடந்தும் இந்த சிற்பங்கள் வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது என்றாா் செங்குட்டுவன்.
