ஆரண்ய காண்டம்: `அந்தக் காட்சிக்கு மட்டும் 15 டேக் எடுத்தேன்.!' - 'சுப்பு' யாஸ்மி...
'தேமுதிகவுக்காக எதுக்கு தியாகம் பண்ணணும்?' - எரிச்சலில் கூட்டணி கட்சிகள்; அறிவாலயத்தின் ப்ளான் என்ன?
கூட்டணி கட்சிகளிடம், தொகுதிகளை குறைத்துக் கொள்ள சொல்லி வலியறுத்திக் கொண்டிருக்கிறது அறிவாலயம். திமுகவின் வலையில் முதல் ஆடாக தலையை கொடுத்திருக்கிறது மதிமுக.

கடந்த முறை 6 சீட்டுகளை வாங்கிய மதிமுக, இந்த முறை 4 சீட்டுகளுக்கு ஓகே சொல்லி, 'கூட்டணியில் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும்' என லாஜிக் பேசியிருக்கிறது. திமுகவின் கிடுக்குப்பிடியில் 'விட்டுக்கொடுப்பது திமுகவுக்காகவா அல்லது தேமுதிகவுக்காகவா?' என்கிற குழப்பத்தில் எரிச்சலடைந்திருக்கின்றனர் கம்யூ.,க்கள் மற்றும் விசிகவினர்.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதியிலிருந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. இதுவரை ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ், மதிமுகவுடன் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று முறை பேச்சுவார்த்தைக்கு வந்தும் உடன்பாடு எட்டப்படவில்லை. அவர்கள் முதல்வரை சந்தித்தும் தங்களின் எதிர்பார்ப்பை கூறிவிட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 2 முறை பேச்சுவார்த்தக்கு வந்திருந்தனர். 'திமுகவின் எண்ணிக்கை குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது!' என சண்முகமே ஓபனாக பேசிவிட்டுச் சென்றார். திருமாவளவன் ஒரே ஒரு முறை மட்டுமே அறிவாலயம் பக்கம் வந்தார். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு இன்னும் வரவில்லை.
கடந்த முறை மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளுக்கு பாரபட்சம் இல்லாமல், தலா 6 சீட்டுகளை அறிவாலயம் ஒதுக்கியது. இந்த முறையும் அதே ஸ்டைலில் பாரபட்சம் இல்லாமல் தலா 4 சீட்டுகள் என பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. இதில்தான் அத்தனை கூட்டணி கட்சியினரும் அப்செட் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
'திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி 20 நாட்களுக்கு மேலாகியும் தேமுதிகவை இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. ஏனெனில், தேமுதிக கூட்டணியை உறுதி செய்த சமயத்திலேயே அவர்களுக்கான நம்பரையும் திமுக இறுதி செய்துவிட்டது என்கிறார்கள்.

9-12 இடங்களை தேமுதிக எதிர்பார்த்தது. அதற்கு அறிவாலயம் க்ரீன் சிக்னல் காட்டியது. ஒருவேளை காங்கிரஸ் வெளியேறினால் தேமுதிக பக்கபலமாக இருக்கும் என திமுக நம்பியது. ஆனால், இப்போது காங்கிரஸூம் 3 தொகுதிகளை அதிகமாக வாங்கிவிட்டு கூட்டணியில் நீடிக்கிறது. அதனால்தான் விசிகவுக்கும் கம்யூக்களுக்கும் நாம் யாருக்காக சீட்டுகளை விட்டுக் கொடுத்து தியாகம் செய்யப்போகிறோம் எனும் குழப்பம் எழுந்திருக்கிறது.
கூட்டணியை தக்கவைக்க திமுகவுக்கு வலுசேர்க்க அவர்களுக்காக வேண்டுமானால் விட்டுக்கொடுக்கலாம், கொள்கைப் பிடிப்பே இல்லாத கால் போன போக்கில் போகும் தேமுதிகவுக்காக எதற்கு நாம் சீட்டுகளை தியாகம் செய்ய வேண்டும் என்கிற கேள்வி கூட்டணி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கே அழைக்காமல், இறுதியில் அவர்களை அழைக்கும் முடிவில் அறிவாலயம் இருப்பது இவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்திருக்கிறது. 'கூட்டணிக்காக விட்டுக்கொடுங்க' என இவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு தேமுதிகவுக்கு அள்ளி கொடுத்தால் என்ன செய்வது என்கிற குழப்பமும் சங்கடமும் விசிகவுக்கும் கம்யூக்களுக்கும் இருக்கிறது' என்கின்றனர் விவரப்புள்ளிகள்.
கூட்டணி கட்சியினரின் சங்கடத்தைப் புரிந்துகொண்டு திமுக தரப்பில் தேமுதிகவிடம் பேசியதை விட சீட்டுகளை குறைத்துக் கொள்ளுமாறு கூறியிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.!
















