"பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!" - சாடும...
'தொடர் தோல்விக்கு பட்டியிலின மக்கள் ஆதரவின்மையே காரணம்' - வேணுகோபால் அதிமுக-விலிருந்து விலகல்
அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
"மாண்புமிகு இதயதெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களைக் கவர்ந்த தலைவராக இருந்தபோதிலும் கழகமும், தொண்டர்களும் புரட்சித்தலைவர் MGR ஒருவரையே சார்ந்து இருந்தபோதும், கழகத்திலிருந்து விலகி சென்றவர்களையும், எதிரணியில் உள்ளவர்களையும், கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார்.

புரட்சித்தலைவர் அவர்களின் அரசியல் வாரிசாக தனிப்பெரும் மக்கள் சக்தியாக இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும், புரட்சித்தலைவர் பாதையில் கழகத்தை வலுப்படுத்த, பிரிந்து சென்ற தலைவர்களை எல்லாம் இயக்கத்தில் இணைத்து கழகத்தை, ராணுவக் கட்டுப்பாட்டோடும், வலிமையோடும் வழிநடத்தினார்.
அத்தகைய மாபெரும் இயக்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய தலைமையில் இயங்கிய கட்டுக்கோப்பான இயக்கம் நம்முடைய அ.இ.அ.தி.மு.க. இன்றைய தினம் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக, பெற்றோரை இழந்து வாடும் அனாதையான குழந்தை யாரிடம், செல்வது என்று வழித்தெரியாமல் தத்தளிப்பது போல் இன்றைய தினம் நம்முடைய கழகத்தின் தொண்டர்களின் நிலை உள்ளது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஒன்றரைக் கோடி தொண்டர்களாக கட்டமைக்கப்பட்டு, 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாராளுமன்றத்தில் இந்தியாவிலேயே மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக வலிமை பெற்றது.
இப்படிப்பட்ட வலுவான இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க). தற்போது இயக்கம் சந்தித்து வரும் தொடர் பின்னடைவுகளுக்கு பின்னால் பல்வேறு அரசியல் மற்றும் சமூகக் காரணிகள் உள்ளது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் காலத்தில் அ.இ.அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத பலமாகப் பட்டியல் இன ஆதரவு இருந்தது.

அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஒரு வலுவான அனைவருக்குமான தோற்றம் குறையத் தொடங்கியதால், அந்த ஆதரவு தளம் படிப்படியாகச் சரிந்தது.
தற்போதைய அரசியல் சூழலில், பட்டியல் இனமக்கள் தங்களை அ.இ.அ.தி.மு.க-வில் இருந்து முழுமையாக துண்டித்துக் கொண்டதோ, அல்லது புறக்கணிப்பதோ, கழகத்தின் தேர்தல் தோல்விகளுக்கு ஒரு முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது.
அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்துச் சென்ற கழக "சமூக கூட்டமைப்பு" தற்போது ஒருக்குறிப்பிட்ட திசையை நோக்கி நகர்வதாக எழும் தோற்றம், மற்ற சமூகத்தினரிடையே ஒரு இடைவெளியை உருவாக்கி உள்ளது.
மீண்டும் கழகம் தன் பழைய பலத்தை பெறவேண்டும் என்றால் அனைத்து கழகத்தினரையும் உள்ளடக்கி ஒரு பொதுவான அரசியல் அணுகுமுறையையும், நம்பிக்கையும் மீண்டும் கட்டி எழுப்பவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழ் மக்கள் நலனையும், கழக தொண்டர்கள் நலனையும் கருத்தில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களோடு செயல்பட்டு வரும் நம்முடைய கழகத்தை வலுப்படுத்த அனைவரும் விட்டுக்கொடுத்து ஓரணியில் திரண்டு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொன்மொழியாகக் கூறிய அ.இ.அ.தி.மு.க. என்ற பேரியக்கம் என்னுடைய மறைவிற்க்கு பிறகு “நூற்றாண்டுகள் வாழும்!" என்பதை நினைவில் கொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவை நினைவாக்க அனைவரும் ஒன்றிணைந்து கழகத்தை வலிமை படுத்தி கழகத் தொண்டர்களின் நன்மதிப்பை பெற்று அனைவரும் ஒருங்கிணைந்து மீண்டும் கழகத்தில் அம்மா அவர்களின் ஆட்சியை அமைப்பதற்க்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை, மாநிலங்களவை அ,இ,அ.தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவராகவும், இந்திய அரசின் பாராளுமன்ற ஊரக வளர்ச்சித் துறை நிலைக் குழத் தலைவராகவும், கழகத்தின் மருத்துவ அணிச் செயலாளராகவும், கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும், பல்வேறு பொறுப்புகளை வகித்ததினாலும் கடந்த 2017-ம் ஆண்டு அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு அணிகளாக பிளவுப்படும் சூழ்நிலையிலும், நான் திறம்பட செயல்பட்டு ஓரணியாக வழி நடத்தி சென்றவன் என்ற காரணத்தினாலும்... இன்றைய சூழ்நிலையில் இந்த கோரிக்கையை கழகத்தொண்டர்கள் அனைவரின் சார்பாக முன்வைத்து மீண்டும் கழகம் எழுச்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மிக்க கனத்த இதயத்தோடும், ஆழ்ந்த மனவருத்தத்தோடும் இன்று முதல் என்னை விடுவித்துக்கொள்கிறேன்".















