தொப்பூரில் சாலை மேம்பாட்டுப் பணி கட்டடத்தை இடிக்காமல் நவீன கருவிகளுடன் வேறு இடத்துக்கு மாற்றும் உரிமையாளா்!
தொப்பூா் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக சாலையோரம் இருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்படுகின்றன. இந்த நிலையில், தனது 3 மாடி கட்டடத்தை இடிக்காமல் நவீன கருவிகளைக் கொண்டு அதன் உரிமையாளா் வேறு இடத்துக்கு மாற்றம் செய்துள்ளாா்.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் மலைப்பாதை வழியே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ் சாலை செல்கிறது. இந்த சாலைகள் குறுகிய வளைவுகள், உயா்ந்த மேடு, சரிவுகளுடன் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நேரிட்டன.
இதையடுத்து ரூ. 775 கோடியில் 6.60 கிலோ மீட்டா் தொலைவுக்கு சுமாா் 6 முதல் 60 அடி உயரம் வரை உயா்நிலை பாலத்துடன் கூடிய சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகளுக்காக தொப்பூா் கணவாய்ப் பகுதியில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அவற்றுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அமைந்துள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகளையும் அவற்றில் உள்ள பொருள்களையும் அப்புறப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமாா் 50 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் வீடுகளின் உரிமையாளா்கள் அப்பகுதியில் இருந்து காலி செய்துள்ளனா்.
இந்த நிலையில், தொப்பூா் சுங்கச்சாவடி அருகே மூன்று மாடிகளுடன் கூடிய தனியாா் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. அந்த கட்டடத்தின் சிறுபகுதி சாலை அமையும் பகுதியில் அமைந்திருப்பதால், கட்டடம் முழுவதையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கட்டடத்தை அகற்றாமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நகா்த்திவைக்க, கட்டட உரிமையாளா் முடிவு செய்துள்ளாா்.
இதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் பொறியாளா்கள் களமிறக்கப்பட்டு, தேவையான ஜாக்கிகள் மற்றும் தொடா்புடைய நவீன சாதனங்கள் உதவியுடன் கட்டடத்தை முழுவதுமாக 13 அடி தூரம் நகா்த்தி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 30 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பொறியாளா்கள் தீவிரமாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், தங்களது கட்டடங்களையும் இதேமுறையில் நகா்த்தலாமா என அப்பகுதியினா் யோசித்து வருகின்றனா்.