நத்தம் அருகே பிரம்மாண்ட மீன்பிடித் திருவிழா!
நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கருத்தலக்கம்பட்டியில் 20 ஏக்கர் பரப்பளவில் சத்திர கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் கண்மாயில் உள்ள அனைத்து மீன்களையும் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் கட்டணம் ஏதுமின்றி பிடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் சமத்துவ மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
தற்போது கண்மாயில் நீர் குறைந்ததால் மீன்பிடித் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கருத்தலக்கம்பட்டி, கும்பச்சாலை, புதூர், குரும்பபட்டி, நல்லூர், கோட்டையூர், கரையூர், சக்கபிச்சம்பட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்களும் மற்றும் வெளி மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடித் திருவிழாவில் ஒரே நேரத்தில் ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி கச்சா, வலை, கூடை மற்றும் ஊத்தா மீன் பிடிக் கூடைகளை கொண்டு மீன்களைப் பிடித்தனர். இதில் ஜிலேபி, குரவை, ரோகு, பாப்லெட் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன.
ஒரு முதியவருக்கு 10 கிலோ எடை கொண்ட மீசை கெளுத்தி மீன் கிடைத்தது. அதை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு எடுத்துச்சென்றார். இந்த மீன்பிடித் திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து தூக்குவாளி, சட்டி, சாக்கு பைகளிலும் மீன்களை நிரப்பி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
பொதுமக்களுக்கு மீன் குஞ்சுகள் உள்ளிட்ட 1 கிலோ முதல் 10 கிலோ எடை வரை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!