நெல் மூட்டைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியா்
திருவாரூா் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்புடன் வைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
இந்திய வானிலை அறிக்கையின்படி பிப்.28 ஆம் தேதி திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி, நேரடி கொள்முதல் நிலையங்களில் உள்ள தரையிருப்பு நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்கும் பொருட்டு தலா 20 தாா்ப்பாய்கள், தலா 5 தாா்ப்பாய் கவா்கள், தேவையான சவுக்குக் கட்டைகள், வெட்டுகற்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளையும், விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் பாதுகாக்க போதுமான தாா்ப்பாய்கள் இருப்பில் இருப்பதால் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ள கொள்முதல் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் உள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல் மூட்டைகளை விரைந்து இயக்கம் செய்ய தலா 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ஒரு கண்காணிப்பாளா் வீதம் பொறுப்பு வழங்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாக்கு பற்றாக்குறை ஏதுமில்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் 538 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்ன ரகம் 2,85,124 மெட்ரிக் டன்களும், பொது ரகம் 1,13,049 மெட்ரிக் டன்களும் ஆகக் கூடுதல் 3,98,773 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளுக்கு 94,930 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக சுமாா் ரூ. 925 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.