முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டத...
``நேருவுக்கும் ஸ்டாலினுக்கும் பஞ்சாயத்து; கொள்ளையடிக்கும் திமுக சேர்மன்" - கராத்தே தியாகராஜன் பேட்டி
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்காக சென்னை மாநகராட்சியில் நடந்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போது, பாஜக சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் பத்திரிகையாளர் சந்திப்பில் திமுக 1973 மஸ்டர் ரோல் ஊழலைப் போல புதிதாக ஒரு ஊழலைச் செய்திருக்கிறது என அதைப் பற்றியும் பேசியிருந்தார்.

அவர் வைத்த குற்றச்சாட்டுகள் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.
சென்னை மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து அம்பத்தூரின் 7 வது மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக ஒரு புகார் கொடுத்திருக்கிறீர்களே. அதைப்பற்றி விளக்க முடியுமா?
அம்பத்தூர் மண்டலம் 7 இல் 1450 தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், 1000 பேர்தான் உண்மையில் பணியில் இருக்கிறார்கள். 1 தூய்மைப் பணியாளருக்கு 23,000 ரூபாய் சம்பளமென 450 தூய்மைப் பணியாளர்களுக்கு போலி கணக்குகளில் சம்பளத்தை வரவு வைத்து மாதம் ஒரு கோடி வரை கொள்ளையடித்திருக்கிறார்கள். திமுக சேர்மன் மூர்த்தி, மண்டல அதிகாரி பிரபாகரன், தூய்மைப் பணியாளர்களை வைத்துப் போராடும் பாரதி என எல்லாருக்குமே இதில் பங்கிருக்கிறது.

1970 களில் கலைஞரின் ஆட்சியில் மஸ்டர் ரோல் ஊழல் பெரும் பேசுபொருளாகி மாநகராட்சியே கலைக்கப்பட்டது. அதேபோன்ற ஒரு ஊழலைத்தான் இப்போதும் செய்திருக்கிறார்கள். பணியிலேயே இல்லாத 450 பேரின் பெயரில் எப்படி சம்பளம் போட முடியும்? பாஜகவினுடைய தொழிற்சங்கம் தொடர்ச்சியாக அளித்த புகார்களை வைத்து மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டேன். ஊழலில் முகாந்திரம் இருந்ததால்தான் அவர் சில அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தலைமையில் இந்த விவகாரத்தை விசாரிக்க கமிட்டியும் அமைத்திருக்கிறார்.
ஊழல் நடந்திருக்கிறது, அதில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் பாரதியும் உடந்தையாக இருக்கிறார் எனச் சொல்ல உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?
தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே போராடிய சமயத்தில், அவர்கள் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்கிற பின்னணியை அறிய முயற்சிகையில்தான் இவர்களின் கூட்டும் தெரிய வந்தது. பாரதியின் தந்தை குமாரசாமியின் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு இருந்து தள்ளுபடியான சர்ச்சையெல்லாம் இருக்கிறது.

பாரதியும் அவரின் சங்கமும் இவ்வளவு பேசுகிறதே, ஏன் அந்த திமுகவின் அம்பத்தூர் சேர்மன் மூர்த்தியைப் பற்றி எதுவும் பேசவில்லை? ஏனெனில், இருவரும் கூட்டாளிகள். மாதமாதம் அடிக்கும் அந்த ஒரு கோடியில் இவர்களுக்கும் பங்கு வருகிறது. துறையின் அமைச்சர் கே.என்.நேரு இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. சென்னை மாநகராட்சி எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்கிற மனநிலையில் இருக்கிறார். அவருக்கு ஸ்டாலினுடன் மோதலா உதயநிதியுடன் மோதலா எனத் தெரியவில்லை. இவர்களின் உட்கட்சிப் பூசலால் மக்களுக்குதான் பிரச்னை.
பாரதியின் உழைப்போர் உரிமை இயக்கம் அரசையும் மாநகராட்சியையும் எதிர்த்துதான் தீவிரமாக போராடுகிறது. நீங்கள் அவரே திமுகவுடன் சேர்ந்து கமிஷன் பார்ப்பதாக சொல்வது லாஜிக்காக இல்லையே?
நாங்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். அதை விசாரிக்க மாநகராட்சி ஆணையர் ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார். விசாரணையில் உண்மைகள் வெளியில் வரும்.

தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் வெளியே முன்னெத்த போராட்டத்துக்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்ததே? நீங்கள் சொல்வதைப்போல பாரதி கமிஷன் பார்ப்பவர் என்றால் எதற்கு பாஜக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது?
ரிப்பன் பில்டிங் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்தது உண்மைதான். நானே களத்துக்குச் சென்று ஆதரவளித்தேன். ஆனால், உள்ளே சென்று பின்னணியை அறிகையில்தானே எல்லாம் தெரிய வருகிறது. அந்தப் போராட்டத்திலேயே 11 சங்கங்கள் கலந்துகொள்ளாமல் வெளியில் நின்றதே. இப்போதும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். பெரிதாக எந்தக் கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லையே.
பாரதியின் உழைப்போர் உரிமை இயக்கம் தனியார்மயத்தை எதிர்க்கிறது. பாஜக இயல்பிலேயே தனியார்மயத்துக்கு ஆதரவான கட்சி. உங்களின் குற்றச்சாட்டை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருக்க முடியவில்லையே?
இந்தியா முழுவைதையும் பேசினால் வேறு கதை. நாம் சென்னை மாநகராட்சியை பற்றி மட்டும்தானே பேசுகிறோம். சென்னை மாநகராட்சியில் தனியார்மயத்தை அனுமதித்ததே திமுகதானே. 1998 இல் ஸ்டாலின் மேயராக இருந்தபோதுதான் இந்தியாவிலேயே முதன்முறையாக தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்து, மாநகராட்சிக்குள் தனியாரை அனுமதித்தார்கள்.

மாநகராட்சிக்குள் பாஜக ஒன்றும் தனியாரை புகுத்தவில்லையே அதனால் அந்த தனியார்மயத்தைப் பற்றிய விஷயத்துக்குள் செல்லவேண்டியதில்லை. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. நாங்கள் மாநகராட்சியில் ஊழல் நடக்கிறதென புகார் கூறுகிறோம். விசாரணை முடியட்டும். அறிக்கை வரட்டும். எங்களின் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் பேசியிருக்கிறேன். தேவைப்பட்டால் திமுகவின் இந்த மஸ்டர் ரோல் போன்ற ஊழலை வெளிக்கொண்டு வர ஆளுநரைக்கூட சந்தித்து முறையிடுவேன்.
















