பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!
பாகிஸ்தான்: பாகிஸ்தானில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக ஜூன், ஜூலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் - செப்டம்பர் வரை, பருவமழையின் தாக்கத்தால் அதீத மழைப்பொழிவும் வெள்ளமும் ஏற்படுவது வாடிக்கை. இதனால் ஏற்படும் இயற்கை சேதங்களால் பாகிஸ்தானில் பரவலாக மக்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். நிகழாண்டு பருவமழை ஜூன் பிற்பகுதியில் தொடங்கிய நிலையில், சுமார் 100 குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(என்.டி.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக, கைபெர் பாக்டுன்க்வா மாகாணத்தில் 40 பேரும், சிந்து மாகாணத்தில் 21 பேரும், பலோசிஸ்தானில் 16 பேரும், இஸ்லாமாபாத்தில் 1 மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரப் பகுதிகளில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளுக்கு வெவேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பருவமழையின் தீவிரத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இயற்கை சேதங்களால் வீடுகள் தரைமட்டமானதில் 118 பேரும், பெருவெள்ளத்தில் சிக்கி 30 பேரும், மின்னல் நிலச்சரிவு உள்ளிட்ட பிற காரணங்களாலும் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 182 குழந்தைகள் உள்பட 560 பேர் காயமடைந்துமுள்ளனர்.