மம்தாவுக்குப் பின்னடைவு - சோதனை, சர்ச்சை, சம்மன்: மேற்கு வங்கத்தின் `அதகள' அரசி...
'பாகுபாட்டை உருவாக்கிய முறை' சென்சாரில் 'தட்கல்' முறை ரத்து! - சின்ன படங்களுக்கு இதனால் என்ன பயன்?
தணிக்கை வாரியத்தில் கடந்த சில வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த 'தட்கல்' முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது, ஒரு திரைப்படத்திற்கு அவசரமாகத் தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுத் திரையரங்க ரிலீஸுக்குக் கொண்டு வருவதற்கு இந்தத் 'தட்கல்' முறையை முன்னணி தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.
வழக்கமான கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி 'தட்கல்' முறையில், வெகு விரைவாகவே சென்சார் சான்றிதழ் பெற்றுவிடலாம் என்பதுதான் இதன் முக்கிய அம்சம்.

ஆனால், இந்த முறைக்குக் கடுமையான எதிர்ப்புகளே நிலவி வந்தன. 'தட்கல்' முறையில் பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் முந்திச் சென்று சான்றிதழைப் பெற்றுவிடுகிறார்கள்.
இதனால், சிறிய திரைப்பட தயாரிப்பாளர்கள் நீண்ட நாள் சான்றிதழுக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது என எதிர்ப்புகள் வலுத்தன. இதனையடுத்து, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இந்த முறையை ஜூன் 1-ம் தேதி முதல் ரத்து செய்திருக்கிறது.
இந்த முறை குறித்து, இதை ரத்து செய்வது எத்தனை அவசியம், இது உண்டாக்கும் சாதக பாதகங்கள் உள்ளிட்டவற்றைக் குறித்து முன்னாள் தணிக்கைக்குழு அதிகாரியும், திரைப்பட இயக்குநருமான ஞான ராஜசேகரனிடம் பேசினோம்.
நம்மிடையே பேசியவர், "சென்சார் போர்டில் சமீப காலமாகப் பின்பற்றப்பட்ட இந்தத் தட்கல் முறையை நான் நல்ல முறையென்று சொல்லமாட்டேன். மும்பை, கேரளா போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் சினிமா வியாபாரச் சூழல் முற்றிலும் வித்தியாசமானது.
மும்பையில் ஒரு படத்தை முன்கூட்டியே சென்சார் செய்து முடித்துவிடுவார்கள். அதன்பிறகு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்துதான் ரிலீஸ் தேதியையே திட்டமிடுவார்கள்.
அதனால் அங்கு எந்தப் பதற்றமும் இருக்காது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை படம் சென்சார் ஆன உடனேயே ரிலீஸ் ஆகிவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஒருவேளை சென்சார் முடிந்து படம் வெளியாகக் கொஞ்சம் தாமதமானால் கூட, 'அந்தப் படம் பிசினஸ் ஆகவில்லை' என்று மார்க்கெட்டில் ஒரு நெகட்டிவ் டாக் கிளம்பிவிடும். இதனால், படம் தயாரானதும் சென்சாருக்கு அப்ளை செய்துவிட்டு, சான்றிதழ் கிடைத்த 2 அல்லது 3 நாட்களிலேயே திரையரங்குகளில் ரிலீஸ் செய்துவிடுவதைத் தமிழ் சினிமா நீண்டகாலமாக ஒரு எழுதப்படாத விதியாகவே பின்பற்றி வருகிறது.
நான் அதிகாரியாக இருந்த 90-களில் இந்தத் 'தட்கல்' முறை கிடையாது. அப்போது 'Queue' முறை மட்டும்தான் இருந்தது. படம் ரிலீஸாகும் தேதியை அடிப்படையாக வைத்து, வரிசையில் பின்னால் இருக்கும் படங்களுக்கு முன்னுரிமை தேவைப்பட்டால், அதற்கு முன்னால் வரிசையில் இருக்கும் தயாரிப்பாளர்களை நாங்களே நேரில் கூப்பிட்டுப் பேசுவோம்.
'இவர்கள் அடுத்த வாரம் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள், உங்களுடைய படம் ரிலீஸாக இன்னும் சில வாரங்கள் இருக்கிறதே... இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாமா?' என்று கேட்டு, அவர்களின் முழு சம்மதத்தைப் பெற்றுத்தான் அவசரத் தேவைக்கான படங்களைச் சென்சார் செய்வோம்.
இதனால் சிறிய படம், பெரிய படம் என்ற பாகுபாடின்றி சினிமாத் துறையில் ஒரு சுமுகமான சூழல் நிலவியது. ஆனால், இடையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தட்கல் முறை ஒட்டுமொத்தச் சூழலையும் மாற்றிவிட்டது.
பெரிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள், தாங்கள் 150 கோடி ரூபாய் செலவில் படம் எடுத்திருப்பதாகவும், தங்களுக்குப் பெரிய ரிஸ்க் இருப்பதாகவும் கூறி, சாதாரணக் கட்டணத்தை விட மூன்று மடங்கு கூடுதல் பணத்தைச் செலுத்தித் தட்கல் முறையில் சான்றிதழைப் பெற்று விடுகிறார்கள்.

சென்சார் போர்டு என்பது ஒரு அரசு ஒழுங்குமுறை அமைப்பு. அதன் முன்னால் 1 கோடியில் படம் எடுத்த தயாரிப்பாளரும், 150 கோடியில் படம் எடுத்த தயாரிப்பாளரும் சமம்தான். எடுத்துக்காட்டாக வாகன உரிமத்தை எடுத்துக் கொள்வோம்.
உரிமத்தை வாங்கப் போகும் இடத்தில் பணக்காரனுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி என்பது எவ்வளவு மோசமானதோ, அதே போன்றதுதான் இந்தத் தட்கல் முறையும் இருந்திருக்கிறது. இரயில்வேயில் அவசரத் தேவைக்காகத் தட்கல் முறை இருப்பதை எப்போதும் ஏற்றுக் கொள்ளலாம்.
அதுவும் ஒட்டுமொத்த இருக்கைகளில் வெறும் 5% மட்டுமே தட்கலுக்கு ஒதுக்கப்படுவதால் பொதுவான முன்பதிவு பாதிப்பதில்லை. அதுவும் அவசர தேவையில் இருப்போருக்கு உதவுவதற்காகத்தான் அது.
ஆனால், சினிமாவில் தட்கல் முறை என்பது வரிசையில் காத்திருக்கும் சிறிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத்தான் பெரிய படங்களுக்கு வழிவகை செய்கிறது.
இதன் காரணமாகப் பண பலமும், ஸ்டார் அந்தஸ்தும் உள்ளவர்களுக்கே முன்னுரிமை கிடைத்து வந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
இதுமட்டுமல்லாமல், ஒரு திரைப்படம், தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், டிசம்பர் 31-ம் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
அந்த அவசர நேரத்தில், பணம் இருக்கும் தயாரிப்பாளர்கள் தட்கல் முறையில் உள்ளே நுழையும்போது, விருதுகளுக்குத் தகுதியான படங்கள் தணிக்கை செய்யப்பட முடியாமல் போகும் சூழலும் உருவானது.

அதே சமயம், 'இந்த அவார்டு படம் எங்கே ஓடப்போகிறது?' என்று கேவலமாகப் பார்க்கும் ஒரு குரூப்பும் இங்கு இருக்கிறது. திரைப்படங்களின் ரிலீஸ் தேதி நெருங்கும் வரை அதில் வேலை பார்த்துக் கொண்டிருக்காமல், முன்கூட்டியே திட்டமிட்டு வேலைகளை முடிக்க வேண்டும் என்ற நிலையை நோக்கிச் சினிமா நகர்வது நல்லதுதான்.
தட்கல் முறை என்பது படைப்பாளிகளிடையே பாகுபாட்டை உருவாக்கி வந்தது. தற்போது இந்தத் தட்கல் முறை நீக்கப்பட்டிருப்பது சிறிய பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் மிகச் சாதகமான, வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாகும். இதன் மூலம் சென்சார் போர்டு முன்னிலையில் அனைவரும் சமம் என்கிற ஆரோக்கியமான சூழல் மீண்டும் உருவாகும்," எனக் கூறியிருக்கிறார்.

















