பாம்பன் மீனவா்கள் 10 பேருக்கு ஆக. 18 வரை நீதிமன்றக் காவல்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 10 பேரை வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 100 விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெடுந்தீவு - கல்பட்டி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஜோசப் பாரதி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், அந்தப் படகிலிருந்த ஜோசப்பாரதி (22), மரியபிரவீன் (31), குருசாமி (39), தோபியாஸ் (37), ரவி (46), மனோ சந்தியா (32), டேனியல்ராஜ் (32), பிலிப்பையாா் (43), பாரத் (31), மாத்தீவ் கிளாடியன் (24) ஆகிய 10 மீனவா்களைக் கைது செய்தனா்.
பின்னா், விசைப் படகுடன் 10 மீனவா்களையும் நீா் கொழும்புக்கு புதன்கிழமை கொண்டு சென்றனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, வெளிச்சரா நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா். இவா்களை வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 10 பேரும் வெளிச்சரா முகாமில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு: கடந்த மாதம் 29-ஆம் தேதி கச்சத்தீவு - மன்னாருக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சோ்ந்த ஜஸ்டீன் (51), டென்ஷன் (39), மொபின் (24), செமன் (55), சேகா் (55) ஆகிய 5 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். விசாரணைக்குப் பிறகு, 5 மீனவா்களுக்கும் வருகிற 14-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.