செய்திகள் :

பெட்ரோல் முதல் உணவு வரை: `விண்ணைத் தொடும் விலை' - சோதிக்கப் போகும் 2026? - எச்சரிக்கும் நிதின் காமத்

post image

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் 'எல் நினோ (El Nino) விளைவால் நடப்பு 2026-ம் ஆண்டில் இந்தியாவில் பருவமழை பொய்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில், ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது. இந்த இரட்டை சவால்களால் இந்தியாவில் பணவீக்கம் மிகக் கடுமையான நிலையை எட்டக்கூடும் என்றும், இதைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என்றும் ஜெரோதா (Zerodha) நிறுவனத்தின் இணை நிறுவனர் நிதின் காமத் எச்சரித்துள்ளார்.

Nithin Kamath, Co-founder,Zerodha
Nithin Kamath, Co-founder,Zerodha

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ``2026-ம் ஆண்டு மொத்தமாகச் சோதிக்கும் ஆண்டாக மாறிவருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் நடப்பு 2026-ம் ஆண்டில் வழக்கத்தை விட 6% குறைவான மழையே பெய்யும் என கணித்துள்ளது. இந்த 6% பற்றாக்குறை என்பது சிறியதாகத் தோன்றினாலும், நாட்டின் பொருளாதாரத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு மழையளவில் கிட்டத்தட்ட 70% தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கிறது. மேலும், நாட்டின் 60%-க்கும் அதிகமான விவசாயிகள் இன்னமும் நீர்ப்பாசன வசதியின்றி, விவசாயத்திற்கு மழையையே நம்பியிருக்கிறார்கள். இதனால், பருவமழை குறைந்தால் அது கிராமப்புற மக்களின் வருமானத்தையும், உணவு உற்பத்தியையும் நேரடியாகப் பாதிக்கும்.

கடந்த கால வரலாற்றை நாம் உற்றுநோக்கினால், 1951-ம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட 'எல் நினோ' ஆண்டுகளில் சுமார் 60% முறை இந்தியாவில் சராசரியை விடக் குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 2009-ம் ஆண்டில் பருவமழை அதன் வழக்கமான அளவில் 78% ஆகக் குறைந்தது. அது 37 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சி ஆண்டாக அமைந்தது. அதே போன்றதொரு இக்கட்டான நிலை இந்த ஆண்டும் ஏற்படக்கூடும். பருவமழை பொய்த்தால் அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் காய்கறிகளின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும். இந்தியக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவில் உணவுப் பொருட்களுக்கே அதிகப் பங்கு உள்ளதால், இது ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கத்தையும் உயர்த்தும்.

Nithin Kamath, Co-founder,Zerodha
Nithin Kamath, Co-founder,Zerodha

வானிலை ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலக எரிசக்தி சந்தையை நிலைகுலையச் செய்துள்ளன. அமெரிக்காவின் ட்ரம்ப் அரசுக்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர்ச் சூழல் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி' பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது. உலகளவில் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் 20 சதவீதமும், LNG 20 சதவீதமும் இந்த ஒற்றைப் பாதை வழியாகவே கொண்டுவரப்படுகிறது. தற்போதைய சூழலில் இப்பாதை முடங்கியிருப்பது உலக நாடுகளுக்குப் பெரும் அடியாக விழுந்துள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 முதல் 90 சதவீதத்தையும், இயற்கை எரிவாயு தேவையில் பாதியையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், சர்வதேச விலை உயர்வு இந்தியாவை நேரடியாகப் பாதிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய கச்சா எண்ணெய் சராசரி விலை ஒரு பேரலுக்கு 114 டாலராகவும், மே மாதத்தில் 106 டாலராகவும் இருந்தது. இது இந்தியாவின் பொருளாதாரத் தாங்குதிறனை விட மிக அதிகம். இந்தத் தொடர் விலையேற்றம் நாட்டின் எரிபொருள் பணவீக்கம், போக்குவரத்துச் செலவுகள் மற்றும் உர உற்பத்திச் செலவுகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையையும் கணிசமாக உயர்த்தும்.

Nithin Kamath, Co-founder,Zerodha
Nithin Kamath, Co-founder,Zerodha

உணவுப் பொருட்களின் விலை உயர்வும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் ஒரே நேரத்தில் ஏற்படுவது இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள மிகக் கடினமான சவாலாகும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்குவதோடு, பணவீக்கத்தையும் எகிறச் செய்யும். உணவு மற்றும் எரிசக்தி விலைகள் ஒன்றாக உயரும்போது, ரிசர்வ் வங்கியால் அமைதியாக இருக்க முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் வட்டி விகிதங்களை உயர்த்தியே தீர வேண்டும். அவ்வாறு வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் போதுதான், சாதாரணப் பொருளாதாரப் பாதிப்பானது கடுமையான நெருக்கடியாக மாறத் தொடங்கும்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி கடந்த ஓராண்டாகவே வட்டி விகிதங்களை மாற்றாமல் நிதானமான கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. எனினும், தற்போதைய சூழல் மத்திய வங்கியின் திட்டங்களை மாற்றியமைக்கக் கூடும். வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், தொழில் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோருக்கான கடன் வாங்கும் செலவு அதிகரிக்கும். இது குறிப்பாக வீடு, வாகன விற்பனை மற்றும் நிறுவனங்களின் புதிய முதலீடுகளை முடக்கும். ஏற்கனவே புவிசார் அரசியல் பதற்றங்களால் தள்ளாடிக் கொண்டிருக்கும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் இந்த பணவீக்க அபாயம் மேலும் பலவீனப்படுத்தும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'இந்திய ரூபாய் ரூ.100-ஐ தொட்டால் தொடட்டும்; வெளிநாடு முதலீடுகள் இந்தியா வரும்!' - பொருளாதார நிபுணர்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. 2026-ம் ஆண்டிலேயே ரூ.100-ஐ தொட்டுவிடுமோ என்கிற அச்சம் வேறு இருந்து வருகிறது. இந்த நேரத்தில், 16-வது நிதி கமிஷனின் தலைவர், நி... மேலும் பார்க்க