முதல்வர் ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 22,23 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள்(ஜூலை 22) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை செல்கிறார். அங்கிருந்து திருப்பூர் செல்லும் முதல்வர், வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்து மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
ஜூலை 23 ஆம் தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதல்வர், விவசாய பொது மக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.
இந்த இரு நாள்கள் கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் சாலைவலம் மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு ஜூலை 23 ஆம் தேதி மாலை சென்னை திரும்புகிறார்.
முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, ட்ரோன் கேமரா, ரிமோட் மூலம் இயங்கும் வான்வெளி சாதனங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நயினார் நாகேந்திரனுக்கு துணை முதல்வர் பதவியா? பாஜகவில் சலசலப்பு!