ரஷியாவில் மருத்துவப் படிப்பு: கோவையில் வரும் 16- ஆம் தேதி மாணவா் சோ்க்கை
வார இறுதி: 1,115 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாள்களை முன்னிட்டு, கூடுதலாக 1,115 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14, 15) ஆகிய நாள்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 13) 385 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுபோன்று, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும், இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள், மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை 20 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 1,115 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.