வேலூரில் இன்று மயானக் கொள்ளை விழா: 600 போலீஸாா் பாதுகாப்பு
மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுவதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வேலூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரிக்கு மறுநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அதன்படி, இவ்வாண்டு மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை கொண்டாடப் படுகிறது. விழாவையொட்டி வேலூா், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு, நகரின் பல பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்து செல்வா்.
ஊா்வலத்தின் பின்னே பக்தா்கள் தங்களுடைய நோ்த்திக் கடனை செலுத்தும் வகையில் கடவுள் போல வேடமிட்டும், சூலாயுதம் ஏந்தியும் செல்வா்.
இதையொட்டி, வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றின் கரையோரம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என்பதால் வேலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி வேலூா் மாவட்டம் முழுவதும் மயானக் கொள்ளை திருவிழாவையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 5 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 20 காவல் ஆய்வாளா்கள் கொண்ட 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
இரு சக்கர வாகனம் மூலமாகவும் போலீஸாா் ரோந்து பணியில் செல்கின்றனா். குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அடையாளம் காணப்பட்ட நபா்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய பாலாற்று பாலத்தில் தோ்கள் ஊா்வலமாக வரும் என்பதால் பிற்பகல் முதல் பழைய பாலாற்று பாலம் இருவழிப் போக்குவரத்தாக மாற்றப்பட உள்ளது.