2-வது ஒருநாள்: இங்கிலாந்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூலை 19) நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தாமதமாக தொடங்கியது. ஆட்டம் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட் செய்தது.
இந்தியா - 143/8
இந்திய அணிக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை. தொடக்க வீராங்கனை பிரதீகா ராவல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா நிதானமாக விளையாடி ரன்கள் குவிக்க, மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. ஹர்லீன் தியோல் (16 ரன்கள்), கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் (7 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (3 ரன்கள்), ரிச்சா கோஷ் (2 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். தீப்தி சர்மா 30* ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 29 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். எம் அர்லாட் மற்றும் லின்ஸி ஸ்மித் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சார்லோட்டி டீன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
Batting first in the second ODI against England, the Indian team scored 143 runs for the loss of 8 wickets.
இதையும் படிக்க: டி20 கிரிக்கெட்டில் இதுவே என்னுடைய பெருமைமிகு தருணம்; மனம் திறந்த ஆண்ட்ரே ரஸல்!