'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' - உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர்...
Army Chief: ``அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" - மாணவர்களிடம் மனம் திறந்து உரையாற்றிய ராணுவத் தளபதி
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதியின் சொந்த ஊர் மத்தியப் பிரதேசத்தின் ரேவா. தன் சொந்த ஊரானா ரேவாவில் உள்ள டிஆர்எஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் ஜெனரல் உபேந்திரா திவேதி உரையாற்றினார்.
அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும், எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றினார். அவரின் உரையில், ``எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நம் யாருக்கும் தெரியாது. இதை நாம் நிலையற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை எனக் குறிப்பிடுகிறோம்.

அமெரிக்காவின் அதிபரான ட்ரம்புக்கு கூட நாளை என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாது. எல்லைகளில், பயங்கரவாதம், இயற்கை பேரழிவுகள், சைபர் போர், செயற்கைக்கோள்கள் சம்பந்தப்பட்ட விண்வெளிப் போர் மற்றும் வேதியியல், உயிரியல் மற்றும் கதிரியக்க அச்சுறுத்தல்கள் போன்ற ஆபத்துகள் மூலம் இந்திய ராணுவம் அதே சவால்களை எதிர்கொள்கிறது.
தகவல் போர் என ஒன்று உள்ளது. உதாரணமாக, ஆபரேஷன் சிந்தூரின் போது, கராச்சி தாக்கப்பட்டதாக வதந்திகள் வந்தன. நாங்களும் அத்தகைய வதந்திகளைக் கேட்டோம். அவை எங்கிருந்து வந்தன, யார் அவற்றைத் தொடங்கினர் என்று யோசித்தோம்.
அவ்வளவு வேகமாகவும், சூழலின் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் செயல்கள் நடக்கும். முதலில், ஆபரேஷன் சிந்தூர் எதிரியைத் தோற்கடிப்பது மட்டுமல்ல - அது இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அமைதியை மீட்டெடுப்பது பற்றியது.
இந்த நடவடிக்கைக்கு சிந்தூர் என்று பிரதமர் என்னிடம் சொன்னபோது, கார்கில் போரின் போது, ஆபரேஷன் விஜய் என்று பெயரிடப்பட்டதும், விமானப்படை அதன் ஆபரேஷன் சஃபேத் சாகர் என்று பெயரிட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது.
இந்த முறை, பிரதமரே ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். அதன் மிகப்பெரிய நன்மை என்ன? முழு தேசமும் "சிந்தூர்" என்ற ஒற்றைப் பெயரில் ஒன்றுபட்டது. அது நாடு முழுவதும் உணர்வுபூர்வமாக எதிரொலித்தது.

நீங்கள் தாக்குதலைத் தொடங்கும்போதோ அல்லது எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டில் விழும்போதோ, அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. எப்போதும் நிச்சயமற்ற தன்மை இருக்கும்.
எத்தனை வீரர்களை இழக்க நேரிடும், என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அல்லது எவ்வளவு பொதுமக்கள் பாதிக்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியாது. இந்த அபாயங்கள் இருந்தபோதிலும், நேரடியாகத் தாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்தோம்.
எதிரி எல்லைக்குள் நுழைந்தாலும் கூட, நாங்கள் 100 கிமீ ஆழம் வரை சென்று தாக்கினோம். நாங்கள் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டோம், ட்ரோன்களைப் பயன்படுத்தத் தயாராக இருந்தோம்.
மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றில் நாங்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டதால் வெற்றி பெற்றோம். எனவே, இளம் தலைமுறையான உங்கள் அறிவும், உங்கள் பங்கேற்பும் எங்களுக்குத் தேவை.
உதாரணமாக, பாகிஸ்தானின் போலி செய்திகள் மற்றும் வதந்திகள் பரவிக்கொண்டிருந்தபோது, செகந்திராபாத்தைச் சேர்ந்த ஒருவர் எங்களைத் தொடர்புகொண்டு,‘சார், எனக்கு ட்விட்டரில் 3 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.

என்ன செய்தியை சொல்ல வேண்டும் என்று சொல்லுங்கள் - அவர்களின் போலி செய்திகளை நாம் அம்பலப்படுத்துவோம்' என்றார். நாடு முழுவதிலுமிருந்து இதுபோன்ற பல ஆதரவுகள் எங்களுக்கு வந்தன.
தேசபக்தியால் சிலர், ‘எங்களை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்றனர். நம் கலாச்சாரம் ஆழமானவை. யார் இங்கு வந்தாலும் அவர்களை ஆழமாக உள்வாங்குவோம்.
இஸ்லாம், கிறிஸ்தவம் அல்லது வெளிநாட்டிலிருந்து வேறு எந்த நம்பிக்கையையும் கொண்டு வந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்திய நாகரிகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர்.
இந்தியாவும் நமது கலாச்சாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட நாடுதான். புத்த மதம் இந்தியாவிலிருந்து சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா வரை பரவியது.
டிஜிட்டல் முறையிலும், தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேறிய நம் இளைய தலைமுறை சமூக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வளவு சக்திவாய்ந்த இந்த தலைமுறை ஒழுக்கத்தையும் சரியான வழிகாட்டுதலையும் பெற்றால், இந்தியா ஒரு நொடியில் முன்னேற முடியும்." என்றார்.

















