Nilgiris: மழையால் பசுமை; மகிழ்ச்சியோடு பசியாறும் யானை கூட்டங்கள்.. கவர்ந்திழுக்கும் நீலகிரி மலை!
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாகவும், அதிக எண்ணிக்கையிலான யானைகளின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டம். பெருந்தோட்ட நிறுவனங்களின் பெயரால் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வனங்கள் துண்டாடப்படுவதால், வாழ்விடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவித்து வருகின்றன யானை குடும்பங்கள்.

உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதே மிகப்பெரிய அச்சுறுத்தலாக அவற்றிற்கு மாறி வருகின்றன. மிகுந்த சவால்களுக்கு மத்தியில் கூட்டத்தை வழிநடத்தி வருகின்றன.
நீலகிரியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக, வனங்கள் அனைத்திலும் தற்போது பசுமை செழித்து காணப்படுகின்றன. பரந்த புல்வெளிகளைத் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வலசைச் சென்று வருகின்றன.

இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள பெரிய சோலை வனப்பகுதியின் மலை உச்சியை அடைந்திருக்கும் யானை கூட்டம் ஒன்று நிம்மதியாக பசியாறி வருகின்றன. பெரிய சோலையில் பேருயிர் குடும்பம் பசியாறும் ரம்மியமான காட்சிகள் காண்போர் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.