Anupama Parameswaran: "காட்டுப்பேச்சி நீ.. பாட்டுப்பேச்சி நீ!" - அனுபமா க்ளிக்ஸ்...
Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும்
இனி தயாரிக்கப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன்களிலும் கட்டாயம் சஞ்சார் சாத்தி ஆப் இருக்க வேண்டும் என்றும்... ஏற்கெனவே உற்பத்தியான, விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசு ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சஞ்சார் சாத்தி ஆப் என்பது மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு ஆப். இந்த ஆப்பை அன்இன்ஸ்டாலோ, டிஸ்ஏபிளோ செய்ய முடியாத வண்ணம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரியங்கா காந்தி என்ன சொல்கிறார்?
மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "அனைவருக்கும் தங்களது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பும் தனிநபர் உரிமை உண்டு. இவை அனைத்தையும் அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை.
இந்த அரசு நாட்டை அனைத்து விதங்களிலும் சர்வாதிகார நாடாக மாற்றி வருகிறது.
அரசாங்கம் எது குறித்தும் ஆலோசிக்க மறுப்பதால் தான் நாடாளுமன்றம் இயங்குவதில்லை.
எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவது மிக எளிது. ஆனால், அவர்கள் எது குறித்தும் விவாதிக்க அனுமதிப்பதில்லை... அது ஜனநாயகம் இல்லை.
ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஆலோசனைகள் மிக முக்கியம். அனைவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கும். அவை அனைத்தையும் கேட்கவேண்டும்.
மோசடிகளை ரிப்போர்ட் செய்வதற்கும், இந்திய குடிமக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் இடையில் மெல்லிய கோடுதான் உள்ளது.
மோசடிகளை ரிப்போர்ட் செய்ய உரிய நடைமுறை வேண்டும் தான். சைபர் பாதுகாப்பு குறித்து நிறைய ஆலோசித்திருக்கிறோம்.
ஆனால், அது குடிமக்களின் மொபைல் போன்களுக்குள் செல்லும் சாக்குப்போக்காக இருக்கக்கூடாது" என்று கூறியுள்ளார்.

ஜோதிராதித்யா சிந்தியா பதில் என்ன?
இந்த ஆப் குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளதாவது...
"நுகர்வோருக்கு உதவுவதும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதும் எங்களது கடமை. சஞ்சார் சாத்தி ஆப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
இதுவரை சஞ்சார் சாத்தி ஆப் மூலம்...
> 1.75 மோசடி மொபைல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
> கிட்டத்தட்ட 20 லட்சம் தொலைந்த மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
> 7.5 லட்சம் திருடப்பட்ட மொபைல்கள் உரிமையாளர்களுக்குத் திரும்ப வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆப் போன் கால்களை கவனிக்காது... எதையும் கண்காணிக்காது.
அதை விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி ஆக்டிவேட், டி-ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.
சஞ்சார் சாத்தி ஆப் வேண்டாம் என்றால் டெலீட் செய்துகொள்ளலாம். இது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கானது ஆகும்.
அனைவருக்கும் இந்த ஆப் இருப்பதைத் தெரியப்படுத்துவது எங்கள் கடமை. இந்த ஆப்பை வைத்திருக்க வேண்டுமா... வேண்டாமா என்பது பயனாளரின் விருப்பம்.
பிற ஆப்களைப் போல, இந்த ஆப்பையும் மொபைல்போனில் இருந்து டெலீட் செய்துகொள்ளலாம்" என்று பேசியுள்ளார்.

















