புதுச்சேரி த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் | Photo Album
``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
"சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண்; திருச்செந்தூர் முருகனின் வேலுக்காக கலைஞர் நீதி கேட்டு நெடும்பயணம் தொடங்கிய மண்.

பாசக்காரர்களான மதுரைக்காரர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாமதுரைக்கு வளர்ச்சி என்றாலே அது தி.மு.க. ஆட்சியில்தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
ஆனால், கடந்த கால தி.மு.க. ஆட்சிகளில் மதுரைக்காக நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். தி.மு.க. அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மதுரையை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் நிகழ்ச்சிதான் இது.
ஒரு லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கியும், 2 இலட்சத்து 58 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். இதுவரை நாம் நடத்தி இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அரசு விழா இந்த விழாதான்.
அமைச்சர் மூர்த்தியின் பிரம்மாண்ட ஏற்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்; வியக்கிறேன். இந்த அரசு விருது விழாவை சித்திரை திருவிழாபோல் ஆக்கியுள்ளார். தன் துறைகள் மூலம் தமிழ்நாட்டு கருவூலத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தந்து நல்ல பெயர் பெற்ற மூர்த்தி, இன்றைக்கு இது அரசு விழாவா அல்லது மாநாடா என்று சொல்லக்கூடிய வகையில் மதுரை மக்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார்.
அதேபோல், இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆற்றலும், அறிவும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்; சிறந்த இறைப்பற்றாளர். அதே நேரத்தில், கடவுளின் பெயரில் வெறுப்பை விதைக்கக் கூடியவர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் சரியாகப் பயன்படுத்தி பதிலடி கொடுப்பவர். அவருக்கும் பாராட்டுக்கள்.

கடந்த கால அவல ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஒட்டுமொத்த இந்தியாவும் - ஏன், உலக நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முற்போக்கான, முன்னோடியான மக்கள் நலத் திட்டங்களை கடந்த நான்கு ஆண்டு காலங்களில் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
அதிக பயனாளிகளைக் கொண்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம்.
புதுமைப்பெண் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 63 ஆயிரத்து 400 பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்.
அதேபோல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் 31 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

காலை உணவுத் திட்டத்தில் 59 ஆயிரத்து 394 பள்ளிக் குழந்தைகளும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 8 இலட்சத்து 60 ஆயிரம் நபர்களும் பயனடைந்துள்ளனர்.
“இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் நபர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டங்களில் மூன்று இலட்சம் மாணவ–மாணவிகளும், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 75 ஆயிரத்து 597 பேரும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 22 ஆயிரத்து 766 நபர்களும், ‘தாயுமானவர்’ திட்டத்தில் 86 ஆயிரத்து 130 பேரும் பயனடைந்துள்ளார்கள்.
முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 3 இலட்சத்து 75 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு கண்டிருக்கின்றோம்.
‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் 341 குழந்தைகளை பாதுகாத்துள்ளோம். மேலும், 4 ஆயிரத்து 196 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம்.
மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனை பயனாளிகள் உள்ளார்கள் என்று பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தால், இந்த ஒரு நிகழ்ச்சி போதாது.
ஒவ்வொரு நாளும் இத்தனை லட்சம் மக்கள் பயனடைவது போல, நாம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். வயிற்றெரிச்சலிலும் ஆற்றாமையிலும் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள்.
நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையையும் நாங்கள் முறியடிப்போம், சிதைப்போம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த பாச்சா எதுவும் பலிக்காது.

நேற்று முன்தினம் நான் ஒரு ட்வீட் செய்திருந்தேன். மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல். அதை நிரூபிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு முன்பு 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 56 ஆயிரத்து 766 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்து கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதுதான் எங்கள் அரசியல்.
மதுரையையும் அதைச் சுற்றி இருக்கின்ற பகுதிகளையும் நல்ல தரமான, உயர்தர வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களாக உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு ஓயாமல் பாடுபடும்," என்றார்.














