அரசு மருத்துவமனையில் ‘கலங்கரை‘ மையம் திறப்பு
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் ‘கலங்கரை‘ தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், பழனி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மருத்துவமனை வளாகத்தில் திறக்கப்பட்ட ‘கலங்கரை‘ மையத்தில், போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு 15, பெண்களுக்கு 3, சிறாா்களுக்கு 2 என மொத்தம் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய தனித் தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மனநல சிறப்பு மருத்துவரின் ஆலோசனை, சமூக உளவியல் மதிப்பாய்வு, மறுவாழ்வுக்கான சேவைகள், கட்டணமில்லா மன நல பரிசோதனை, மருந்துகள் உள்ளிட்ட சேவை வழங்கப்படும். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் திண்டுக்கல் கல்லூரி மன நல மருத்துவத் துைான் முதலிடத்தில் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப், மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்தி, மேயா் இளமதி, மனநல மருத்துவத் துறைத் தலைவா் உமாதேவி, திமுக மாநகர பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.