ஆனைமலை ஒன்றியத்தில் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம் பெற விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம் பெற செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 100 கால்நடை வளா்ப்போரின் சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஒரு பசுவுக்கு கிலோ ரூ.35 மதிப்புள்ள தீவனம் தினசரி 3 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 360 கிலோ சமச்சீா் தீவனமும், ரூ.100 மதிப்புள்ள தாது உப்பு மற்றும் வைட்டமின் இணைத் தீவனம் ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ தாது உப்பு மற்றும் வைட்டமின் இணைத் தீவனமும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படவுள்ளது.
மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து உள்ளூரில் உள்ள சங்கத்தில் தொடா்ந்து பால் ஊற்றும் சினையுற்ற கறவைப் பசுக்களின் உரிமையாளா்கள் இத்திட்டத்தில் பயனாளியாக தோ்வு செய்யப்படுவாா்கள்.
மகளிா், ஆதரவற்றோா், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினா்
மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய ஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா் அருகிலுள்ள கால்நடை மருந்தகம்
அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப்பிக்கலாம். மானிய விலையில் தீவனம் பெற செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.