திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி
ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!
தாய்லாந்து - மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட உள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட், இணையவழி பண மோசடி உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்று கூறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆன்லைன் மோசடி செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 7,000 பேர் சிக்கியுள்ளனர்.
தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா இம்மாதம் பெய்ஜிங்கிற்குச் சென்று சீன பிரதமர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக தாய்லாந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். அதன்படி தாய்லாந்து, மியான்மர், சீனா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஆன்லைன் மோசடி மையங்களில் பணிபுரிந்த 7,000 பேர் பிடிபட்டுள்ளனர்.
மியான்மர், கம்போடியா, லாவோஸில் உள்ள மோசடி மையங்களில் வேலை செய்த இவர்கள், காதலித்து ஏமாற்றி பணம் பறிப்பது, சட்டவிரோத சூதாட்டம் என பல வழிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வலையில் பெரும்பாலானோர் சிக்கிக்கொண்டு பணத்தை இழந்துள்ளனர்.
ஆன்லைன் மோசடிக்கு எதிரான தாய்லாந்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மோசடி மையங்களை நடத்தும் மியான்மரின் பல பகுதிகளுக்கு முதலில் மின்சாரம், இணையம், எரிவாயு விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த பணிகளில் ஈடுபட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | வெளிநாட்டு வேலை: சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தெலங்கானா இளைஞர்கள்!
இந்நிலையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்களை தாய்லாந்து காவல்துறை கைது செய்துள்ள நிலையில், அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக தாய்லாந்து, மியான்மர் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் அடுத்த வாரம் ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தின் துணைப் பிரதமர் பும்தம் வெச்சாயாசாய், நிலைமையை விரைவாக ஆராய்ந்து, அனைவரும் விரைந்து நாடு திரும்புவதை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். ஏனெனில் அவர்களை சாதரணமாக விடுவித்தால் மிகப்பெரிய பிரச்னை உருவாகும் என்றும் தெரிவித்தார்.
தூதரகங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசுகள், தங்கள் நாட்டினரை அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 7,000 பேருக்கு தங்குமிடம், உணவு அளிப்பது சவாலானது என்று தாய்லாந்து அதிகாரிகள் கூறினர்.
சொந்த நாடு திரும்பக் காத்திருக்கும் 7,000 பேரில் பாதி பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், எஞ்சியுள்ள 50% பேர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்து - மியான்மர் எல்லையில் இந்தியாவைச் சேர்ந்த 2,000 பேர் ஆன்லைன் மோசடி வேலையில் பணிபுரிவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களில் இந்தியர்களும் கணிசமாக இருக்க வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் நான்கு நாட்களில் 600-க்கும் மேற்பட்ட சீனர்கள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இதற்காக சீனா 16 விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாத தொடக்கத்தில், எத்தியோப்பியா முதல் பிரேசில், பிலிப்பின்ஸ் வரை 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 260 பேர் மியான்மரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு தாய்லாந்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து - மியான்மர் எல்லையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தூதரகம் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.