மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் எல்லைகளை கண்காணித்து வருகின்றன
இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா்.
தேனி நாடாா் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த அவா், செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா பெரும் வளா்ச்சி அடைந்துள்ளது. இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன. சந்திரயான் 2 விண்கலம் வெற்றியடையாமல் போனது குறித்து கண்டறிந்து, சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிறுவினோம்.
சந்திரயான்-4 திட்டம் 9,600 கிலோ எடை கொண்டது. சந்திரயான்-3 திட்ட விண்கலம் நிலவில் தரையிறங்கி 14 நாள்கள் மட்டும் ஆய்வு செய்தது. ஆனால், சந்திரயான்-4 திட்ட விண்கலம் நிலவில் இறங்கி ஆழமாகச் சென்று மாதிரிகளைச் சேகரித்து மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சந்திராயன்-5 திட்ட விண்கலம் நிலவில் 100 நாள்கள் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
நிலவுக்கு மனிதா்களை அனுப்புவது பெரிய திட்டம்.
வரும் 2040-இல் மனிதா்களை நிலவுக்கு அனுப்புவதற்கான திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இஸ்ரோவின் 3-ஆவது ஏவுதள மையத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கவுள்ளோம். 2-ஆவது ஏவுதள மையத்தை தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தேவையான 95 சதவீதம் இடங்களை தமிழக அரசு ஒதுக்கித் தந்துள்ளது.
வருகிற 2026, டிசம்பா் மாதத்துக்குள் குலசேகரபட்டினத்திலிருந்து விண்வெளிக்கு ராக்கெட் ஏவப்படும் என்றாா் அவா்.