"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்க...
இஷா சிங்: 'மும்பை பின்னணி, மனித உரிமை ஆர்வலர்' புதுவையில் ஆனந்திடம் கறார் காட்டிய பெண் காவலர் யார்?
கட்சி ஆரம்பித்த பிறகு புதுச்சேரியில் முதல் முதலாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். தவெகவின் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக பாஸ் இல்லாத தொண்டர்கள் சிலரை புஸ்ஸி ஆனந்த் மைதானத்துக்குள் அனுமதிக்க முயற்சித்தார்.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.எஸ்.பி. இஷா சிங் ஆனந்திடம் கடுமையாக எதிர்வினையாற்றி பாஸ் இல்லாதவர்களை உள்ளே விடாமல் தடுத்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுக்கூட்டத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் வரக்கூடாது. அதிகபட்சமாக 5000 பேருக்கு மட்டும்தான் அனுமதி. அவர்களுக்கும் பாஸ் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே கட்டுப்பாடு. அதன்படி தவெக சார்பில் பாஸூம் விநியோகிக்கப்பட்டது. ஆனால், விஜய்யை பார்க்க பாஸ் இல்லாமலும் நிறைய தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்களும் மைதானத்தை சூழ்ந்திருந்தனர். அதில் ஒரு பகுதியினரை உள்ளே அனுமதிக்குமாறு தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த்தும் சில மாவட்டச் செயலாளர்களும் அங்கிருந்த பெண் காவலரிடம் கோரினர்.

அவர்களை உள்ளே அழைக்கவும் முயன்றனர். உடனே அதை தடுத்த பெண் எஸ்.எஸ்.பி இஷா சிங், 'நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லாதீர்கள். உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள்.' என கடுமையாக கூறி தொண்டர்களை உள்ளே விடாமல் தடுத்தார். நூற்றுக்கணக்காக கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் சரியாக அமல்படுத்தி உறுதியாக நின்ற இஷா சிங்கை இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
இஷா சிங்
இஷா சிங் இதற்கு முன்பு புதுச்சேரியின் லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்.பி ஆக பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் எஸ்.எஸ்.பி ஆக பதவி உயர்வு பெற்றார். அவர் மகாராஷ்டிராவில் பிறந்தவர். இஷா சிங்கின் தாத்தா, அப்பா இருவருமே ஐ.பி.எஸ் அதிகாரிகள். அவரின் அப்பா Y.P.சிங் சில ஊழல் வழக்குகளில் நேர்மையாக விசாரணை நடத்தியதால் ஓரங்கட்டப்பட்டதாக இஷா சிங் சொல்கிறார். மனமுடைந்த Y.P.சிங் 2004 இல் காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிடுகிறார்.

அப்போதிருந்தே ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பதுதான் இஷாவுக்கு விருப்பம். 'National School Of Law' வில் சட்டம் படிக்கிறார். மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். குறிப்பாக, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவராக இருந்திருக்கிறார். விஷவாயு தாக்கி உயிரிழந்த மலம் அள்ளும் தொழிலாளர்களின் மனைவிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம்
'வழக்கறிஞராக இருந்த போது நான் இரண்டு விதமான நபர்களை சந்தித்திருக்கிறேன். ஒரு பக்கம் சமூகத்தின் இழிவு மனப்பான்மையால் மலம் அள்ளப் போய் உயிரிழந்த தொழிலாளர்களின் மனைவிகள். இன்னொரு பக்கம் எல்லா அதிகாரமும் அவர்களால் எதையும் சாதிக்கும் வல்லமை வாய்க்கப்பெற்ற சக்திமிக்கவர்கள். ஆனால், எல்லாருக்கும் மேலானது நம்முடைய சட்டம்தான்.
சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம். எந்த பேதமும் கிடையாது. ஆனால், இதை பேசுகையில் அதெல்லாம் வெறுமென சட்டப்புத்தகத்தில் மட்டுமே சாத்தியம். யதார்த்தம் வேறாக இருக்கும் என்றனர். சட்டத்தை எந்த பேதமும் இல்லாமல் அமல்படுத்தும் இடத்துக்கு வர வேண்டும் என்பதற்காகதான் ஐ.பி.எஸ் ஆனேன்.' என சமீபத்தில் ஒரு மேடையில் பேசியிருக்கிறார் இஷா சிங்.

இவர்தான் இன்றைக்கு கட்டுப்பாட்டை மீறி தவெகவினர் சிலரை அனுமதிக்க முயன்ற போது, கடுமையாக எதிர்வினையாற்றி அவர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.!












