ஓரணியில் தமிழகத்தை திரட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அணி வெற்றி பெற ஓரணியில் தமிழகத்தை திரட்ட வேண்டும் என்று அக்கட்சி இளைஞரணியினருக்கு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழர்களை உயர்த்தும் திராவிட இயக்கத் தத்துவங்களை அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறையின் இரத்த அணுக்களில் ஏற்றும் கொள்கைப் பாசறையாம்
திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட நாள் இன்று!
மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த நம் திமுக இளைஞரணி தற்போது 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் வழிகாட்டலில் நம்முடைய முதல்வா் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட இளைஞரணி எனும் தீரா் படையின் தற்போதைய செயலாளராகப் பணியாற்றுவதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் இளைஞா்களை கொள்கை மயப்படுத்தும் இலக்கில் இருந்து சிறிதும் விலகாமல் கட்டுப்பாட்டுடன் கடமையாற்றும் நம் இளைஞரணி, கழகத்தின் நாற்றங்காலாக திகழ்கிறது.
களப் பணியிலும், கொள்கை நெறியிலும் இளையச் சமுதாயத்தைத் தயாா்படுத்த இளைஞரணி மேற்கொண்டு வரும் பணிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டைக் காத்து நிற்கும்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அணி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க முதல்வா் இட்ட கட்டளையை நிறைவேற்ற களம் புகுவோம். பாசிசத்தை நொறுக்குவோம்! தமிழ்நாடு வெல்லும்! என்று கூறியுள்ளார்.