திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்- எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி காரணமாக கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் "மக்கள் முதல்வரின் மனிதநேய விழா-2025' எனும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் புதன்கிழமை (பிப்.26) நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசியது: அரசின் துறைகளுக்கு தாய் துறையாக கல்வித்துறை விளங்குகிறது. நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களைவிட பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம் கல்வியில் தமிழகம் உயர்ந்துள்ளதுதான்.
அகில இந்திய அளவில் கல்வி பெற்றோர் விகிதம் சராசரியாக 22 முதல் 25 சதவீதம் என உள்ளது; தமிழகத்தில் கல்வி பெற்றோர் விகிதம் 54 சதவீதம். இதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தில் ஆரம்பக் கல்வி முதலே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கல்வியை வழங்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
பசியால் கல்வி கற்க முடியவில்லை எனும் நிலை மாற காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. பசி தெரியாதவர்களுக்கு இத்திட்டத்தின் முக்கியத்துவம் தெரியாது. வயதுக்கேற்ப மனிதர்களின் ஆசைகள் மாறும். ஆனால், மனிதர்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை அணையாத நெருப்பு பசி.
வடமாநில குழந்தைகளுக்கு கல்வி: முதல்வர் ஸ்டாலின் அத்தகைய பசியைப் போக்கி ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். அதற்கு மேல் பயில விரும்புவோருக்கு "நான் முதல்வன் திட்டம்' கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் கல்விக்கு செய்துள்ள பலனை, அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் அறுவடை செய்யும்.
வடமாநிலங்களில் இருந்து சிலர் வருவதால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என தவறாக கூறப்படுகிறது. தமிழர்கள் கல்வியால் முன்னேறி உயர் பதவிக்குச் சென்றதால் மற்ற பணிகளுக்கு வடமாநிலத்தவர் வருகின்றனர். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநிலத்தவரின் குழந்தைகளுக்கும் தமிழக அரசு கல்வி வழங்க முன்வர வேண்டும் என்றார் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்.
இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், "உலகம் படைக்கப்பட்டது எனக் கூறினால் ஆன்மிகம்; உருவானது எனக் கூறினால் நாத்திகம். கடவுள் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும் என்பதை முதல்வர்
மு.க. ஸ்டாலின் கொள்கையாகக் கொண்டுள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த "மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தால் கிராமப்புற முதியோர் பலன் அடைந்துள்ளனர்' என்றார்.
தில்லிக் கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே. பெருமாள் பேசுகையில், "நாட்டிலேயே ஒருசில மாநிலங்களில் மட்டுமே அயலகத் துறை உள்ளது. அவ்வாறு தமிழகத்தில் உள்ள அயலகத் துறையில் வெளி மாநிலங்களில் உள்ளவர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்; இதற்கு பாராட்டுக்கு உரியவர் முதல்வர் ஸ்டாலின்' என்றார்.
வட சென்னையின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது அவசியம்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
"மக்கள் முதல்வரின் மனிதநேய விழா'வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது: "இந்திய நாட்டை பொருத்தவரை பொதுவாக வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று கூறுவார்கள். ஆனால், சென்னையைப் பொருத்தவரை வடக்கு தேய்கிறது; தெற்கு வாழ்கிறது என்ற நிலைதான் காணப்பட்டது. இப்போது வடசென்னை பகுதிகளைச் சேர்ந்த சென்னை மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர்அதை மாற்றி வட சென்னையும் வளர்கிறது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, முதல்வர் மு.க.ஸ்டாலினே வட சென்னையில் உள்ள கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினர் எனும்போது, வட சென்னை விரைவிலேயே தென் சென்னைக்கு நிகரான வளர்ச்சியை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை' என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.