"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்க...
கவிஞர் புலமைப் பித்தன் மனைவி காலமானார்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசவைக் கவிஞராக இருந்தவரும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பருமான மறைந்த கவிஞர் புலமைப் பித்தனின் மனைவி தமிழரசி, நேற்று கோயம்புத்தூரில் காலமானார். அவருக்கு வயது 83.
எம்.ஜி.ஆர் நடித்த ’குடியிருந்த கோவில்’ படத்தில் வரும் ‘நான் யார் நீ யார்’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் புலமைப்பித்தன். தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பல படங்களில் இவர் எழுதிய பாடல்கள் ஹிட் ஆகின. அறுபதுகளில் தொடங்கிய இவரது பயணம் 2015 வரை சினிமாவில் தொடர்ந்தது. சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். பட்டு வண்ண ரோசாவாம், உச்சி வகுந்தெடுத்து ஆகிய எவர்கிரின் பாடல்கள் இவர் எழுதியவையே.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது சட்டமேலவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலவையின் துனைத் தலைவராகவும் இருந்தவர். மேலும் தமிழக சட்டப்பேரவையின் அரசவைக் கவிஞராகவும் இவரை நியமித்தார் எம்.ஜி.ஆர்.

இவரின் மனைவி தமிழரசி கோபிச்செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். பிள்ளைகள் இருவரும் மரணமடைந்து விட்ட நிலையில், புலம்மைப் பித்தனும் 2021-ம் ஆண்டு காலமானார். அப்போது முதல் தமிழரசி கோவையில் வசிக்கும் தன்னுடைய மகன் வழிப் பேரன் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக வயோதிக பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த தமிழரசி, நேற்று முன்தினம் இரவு காலமானார். உடலடக்கம் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
தற்சமயம் அதிமுக-வில் இருக்கும் புலமைப் பித்தனின் தம்பி மகன் மோகனிடம் நாம் பேசியபோது, ``கட்சி அளவுல யாருக்கும் நாங்க சொல்லலை. பெரியம்மாவின் சொந்த ஊர் கோபிங்கிறதால செங்கோட்டையனுக்கு மட்டும் சொல்லலாம்னு தோணுச்சு.. ஆனா அவர் இப்ப கட்சி மாறிட்டதால அந்த முடிவைக் கூட கை விட்டுட்டோம்" என்றார்.



















