செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் சம்மதம்: இரு நாடுகளிடையே ...
காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி... மகன் அர்ஜுனைப் பாராட்டி நெகிழ்ந்த சச்சின்!
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். 2026 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அறிமுகமான அவர், தனது முதல் போட்டியிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மகனின் இந்த சாதனைப் பயணத்தின் தொடக்கத்தைக் கண்டு, தந்தை சச்சின் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிமுகப் போட்டியிலேயே கவனம் ஈர்த்த அர்ஜுன்!
சனிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், லக்னோ அணி தோல்வியைத் தழுவியபோதும், 26 வயதான அர்ஜுனின் பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்தது. 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஒரு துல்லியமான யார்க்கர் மூலம் பிரப்சிமரனை எல்பிடபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழக்கச் செய்தது, அவரது திறமைக்குச் சான்றாக அமைந்தது. போட்டியின் முதல் ஓவரிலேயே ஒரு கேட்ச் தவறவிடப்படவில்லை என்றால், அவருக்கு இன்னுமொரு விக்கெட் கிடைத்திருக்கும். பந்துவீச்சில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் களம் கண்ட அவர், 5 பந்துகளைச் சந்தித்து 5 ரன்கள் எடுத்தார்.
மகனுக்காக உருகிய தந்தை!
அர்ஜுனின் இந்த சிறப்பான தொடக்கத்தைக் கண்டு பெருமைப்பட்ட சச்சின், தனது X பக்கத்தில் உணர்ச்சிகரமான ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "நன்றாகச் செய்தாய் அர்ஜுன். இந்த சீசன் முழுவதும் நீ உன்னை வழிநடத்திய விதம் பெருமையளிக்கிறது. உன் திறமை மீது நீ வைத்திருந்த நம்பிக்கை, பொறுமை, அமைதியாகக் காத்திருந்து கடினமாக உழைத்தது, கடைசிப் போட்டி வரை வாய்ப்புக்காகக் காத்திருந்தபோதும் நேர்மறையாக இருந்தது என அனைத்தும் பாராட்டுக்குரியது," என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "கிரிக்கெட், திறமையை சோதிப்பது போலவே பொறுமையையும் சோதிக்கும். இன்று இரண்டையும் நீ சிறப்பாகக் கையாண்டாய். எப்போதும் போல் ஆட்டத்தின் மீது காதல் கொண்டு, அடக்கத்துடன் பயணத்தைத் தொடர்வாயாக. எப்போதும் என் அன்பு உனக்கு உண்டு," என்று தனது வாழ்த்தையும், அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய அணி, புதிய தொடக்கம்!
2026 ஐபிஎல் தொடர் அர்ஜுனுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சீசனாகும். இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த அவர், இந்த ஆண்டுதான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். லக்னோ அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், தொடரின் கடைசி லீக் போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. கிடைத்த ஒரே வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, தனது திறமையை நிரூபித்துள்ளார் அர்ஜுன்.




















