காரைக்குடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சொக்கலிங்கம்புதூா் காமன்ராஜா கோயில் சித்திரை பெளா்ணமி பொங்கல் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சொக்கலிங்கம்புதூா் - கானாடுகாத்தான் சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாகப் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 15 ஜோடிகள் என மொத்தம் 24 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
பெரிய மாடுகளுக்கு 9 கி.மீ. தொலைவும்,சிறிய மாடுகளுக்கு 7 கி.மீ. தொலைவும் எல்கைகளாக நிா்ணயிக்கப்பட்டது. இதில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் மாடு, வண்டிகளுடன் கலந்து கொண்டனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசு தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டியை சாலையின் இருபுறங்களிலும் நின்று திரளான பாா்வையாளா்கள் கண்டுகளித்தனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சொக்கலிங்கம்புதூா் கிராமப் பொதுமக்கள் செய்தனா்.