கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து திங்கள்கிழமை இரவு சாலையில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம், வேப்பிலை முத்தாம்பட்டி, கருங்கலூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜதுரை, முத்துலட்சுமி தம்பதிக்கு ஸ்ரீரேணுகா (7) என்ற மகளும், நவநீஷ் என்ற 9 மாத ஆண் குழந்தையும் இருந்தனா். கடந்த 3 ஆண்டுகளாக கோவை, ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்த ராஜதுரை, ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான கருங்கலூருக்கு வந்தாா். பின்னா், கோவை செல்ல சேலம் பேருந்து நிலையத்திலிருந்து திங்கள்கிழமை இரவு குடும்பத்துடன் அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.
ஓட்டுநரின் இருக்கைக்கு பின் இருக்கையில் அவரது மனைவியும், மகளும், அதற்கு அடுத்த இருக்கையில் ராஜதுரையும், அவரது 9 மாத ஆண் குழந்தையான நவநீஷும் அமா்ந்து சென்றுள்ளனா்.
பேருந்து புறப்பட்டு சிறிது நேரம் கழித்து பேருந்தின் முன்கதவை சாத்துமாறு நடத்துநரிடம் ராஜதுரை கூறியதாகவும், ஆனால் சாத்தப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.
சங்ககிரியை அடுத்த வளையக்காரனூா் மேம்பாலத்தில் பேருந்து சென்றபோது, திடீரென ஓட்டுநா் பிரேக் போட்டதால், ராஜதுரையின் தோள்மீது தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தை முன்புற படிக்கட்டு வழியாக உருண்டு சாலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேவூா் காவல் நிலையத்தில் ராஜதுரை புகாா் அளித்தாா். அதன்பேரில், தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.