காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலக இதுவே பிரதான காரணம்: மிட்செல் ஸ்டார்க்
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், குரூப் பி பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான போட்டி கடுமையாக உள்ளது. அரையிறுதிக்கான போட்டியில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை மோதவுள்ளன.
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?
ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் பலரும் இல்லாதபோதிலும், அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் பட்சத்தில், அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
மிட்செல் ஸ்டார்க் விளக்கம்
ஆஸ்திரேலிய அணி முக்கியமான போட்டியில் விளையாடவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியதற்கான பிரதான காரணம் என்ன என்பது குறித்து மிட்செல் ஸ்டார்க் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. டெஸ்ட் தொடர் முழுவதுமே எனக்கு கணுக்காலில் வலி இருந்தது. அதனை சரிசெய்ய வேண்டும் என நினைத்தேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிறது. அதன் பின், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளோம். ஐபிஎல் தொடரும் இருக்கிறது. ஆனால், இவற்றில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியே எனது மனதில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. கணுக்கால் வலியிலிருந்து குணமடைந்து அடுத்து சில இரண்டு மாதங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும். அதன் பின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி மொத்த ஆஸி.க்கு எதிராக திட்டமிருக்கிறது: ஆப்கன் கேப்டன்
35 வயதாகும் மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த ஓரிரு மாதங்களில் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.