"நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்" - 'பெத்தி' விவகாரம் குற...
"சினிமாவில் பெண்களைக் காட்டும் விதம் கொடூரமானதாக இருக்கிறது" - 'பெத்தி' பட விவகாரம் குறித்து கங்கனா
ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் 'அச்சியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஜான்வியின் கதாபாத்திரம் காட்டப்பட்ட விதம், தவறான கேமரா கோணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, துன்புறுத்தல், சம்மதமில்லா செயல் ஆகியவற்றை சாதாரணமாக்குவது போன்ற வசனங்கள் ஆகியவை இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை எவ்வாறு எழுத வேண்டும், எப்படித் திரையில் காட்ட வேண்டும் என்பது குறித்த விவாதங்களும் இதனால் தீவிரமடைந்தன.
இதனைத்தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் 'India Today'-விற்கு இதுதொடர்பாக பேட்டி அளித்திருக்கிறார்.
அதில், "நீங்கள் ஒரு லோக்கல் டிரெயினில் பயணித்தாலும் கூட, அங்கு பெண்கள் ஒரு பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். எனவே, திரைப்படங்களில்தான் அவர்கள் அவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறான ஒன்று.
நீங்கள் லோக்கல் டிரெயினிலோ அல்லது உள்ளூர் பேருந்திலோ பயணித்தால், அங்கு நடக்கும் தள்ளுமுள்ளுகளும் இடிப்புகளும் அதைத்தான் காட்டுகின்றன. இது பொதுச் சாலைகளிலும் கூட நடக்கிறது.

ஆனாலும், திரைப்படங்கள் பெண்களைக் காட்டும் விதம் மிகவும் கொடூரமானதாகவே இருக்கிறது. அது 'செக்ஸி-செக்ஸி முஜே லோக் போலே' போன்ற கவர்ச்சிப் பாடல்களாக இருக்கட்டும், அல்லது 'சர்க்காய் லோ காட்யா' போன்ற பாடல்களாக இருக்கட்டும், எல்லாமே அவ்வாறுதான் இருந்திருக்கின்றன.
சில நேரங்களில் ஒரு பெண்ணைக் கவர்ச்சியாகக் காட்டுவதற்கும், ஆபாசத்திற்கும், பெண் குலத்திற்கு இழைக்கப்படும் முழுமையான அநீதிக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அறிந்தோ அல்லது அறியாமலோ மங்கிப்போய்விடுகிறது. பொழுதுபோக்குத் துறையின் இயல்பே அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன்" என்று கங்கனா கூறியிருக்கிறார்.







.jpeg)








