புதுவை: "முதல்வர் ரங்கசாமி இறந்தால் அவரை சித்தராக வழிபடுவர்" - அமைச்சர் ஜான்குமா...
சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆரம்பாக்கத்தில் அதிமுகவினர் மறியல் ஆர்ப்பாட்டம்!
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை 8 நாளாகியும் கைது செய்ய தவறியதாகக் கூறி தமிழக அரசையும் காவல்துறையினரையும் கண்டித்து சனிக்கிழமை ஆரம்பாக்கத்தில் காவல் நிலையம் அருகே அதிமுகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 12ஆம் தேதி பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த சிறுமியை மர்ம நபர் பின் தொடர்ந்து, அவரை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தப்பி ஓடினார். தொடர்ந்து, சிறுமி சென்னையில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த எட்டு நாள்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் கைது செய்யப்படாததை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அதிமுக சார்பில் இன்று(ஜூலை 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெ.சுரேஷ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை மாவட்ட செயலாளர் டி.சி.மகேந்திரன், ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு ஏற்பாட்டில் ஆரம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மறறும் 200 அதிமுகவினர் உள்ளிட்ட 500 பேர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுமியம் பலராமன், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், கும்மிடிப்பூண்டி நகர அதிமுக செயலாளர் எஸ்.டி.டி.ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் இமயம் மனோஜ் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

தொடர்ந்து அனைவரும் ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு வந்தனர். அனைவரும் காவல் நிலையத்திற்கு நுழைய முற்பட்டபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆனாலும் அதிமுகவினர் காவல் நிலையத்திற்குள் நுழைந்த நிலையில், மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் மேற்கண்ட குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய நபரை உடனடியாக கைது செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவினர் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய நிலையில், காவல் நிலையத்துக்கு வெளியே நின்று இருந்த பெண்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் அதிமுகவினரும் காவல்துறையினரும் பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அகற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் பி.என்.ஆர்.நாகராஜ், மாவட்ட நிர்வாகிகள் கண்ணம்பாக்கம் சதீஷ், பல்லவாடா ரமேஷ் குமார், போந்தவாக்கம் டேவிட் சுதாகர், மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகி சிராஜுதின், ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.டி.நாகராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தேவி சங்கர், ஆரம்பாக்கம் அதிமுக நிர்வாகி ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிக்க: வரதட்சிணை கேட்டு மனைவியைத் தாக்கிய காவலர் கைது!