சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட 92 வயது மூதாட்டி!
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 63வது ஆண்டாக முத்தம்மாள்(92) என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி அன்று கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் செய்து சுவாமிக்கு படைக்கும் விஷேச நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
புதன் கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 12 மணிக்கு ஊரணிபட்டியை சேர்ந்த முத்தம்மாள்(90) என்ற மூதாட்டி தொடர்ந்து 63வது ஆண்டாக கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார்.

இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே! டீ ரூ.10, சமோசா, வடை ரூ. 20!
நெய்யால் பக்தர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு மூதாட்டி ஆசி வழங்கினார். மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாள்கள் விரதமிருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்து, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் செய்தார்.
அந்த அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.