Army Chief: ``அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" - மாணவர்களிடம் மனம் திறந்து உரைய...
``சூரசம்ஹாரத்தை அனிமேஷன் படமாக எடுத்தால் என்ன?" - ரசிகரின் கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில்
ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு திரையுலகின் மாயாஜாலம் வேறுவிதமாக மாறிவிட்டது. சமீபமாக வெளியாகும் அனிமேஷன் படங்களும் பெரும் வெற்றிபெற்றிருக்கிறது.
இந்தியாவில் மஹாவதார் நரசிம்மா (Mahavatar Narsimha) என்ற அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
இதுவரை அதிக வசூல் செய்த முதல் இந்திய அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்து, இந்திய அளவில் ரூ.100 கோடியைக் கடந்து வசூலித்தது.

இதன் மொத்த வசூல் ரூ.250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியப் புராணக் கதையான நரசிம்மரின் அவதாரத்தைப் பற்றிய 3D அனிமேஷன் திரைப்படம்.
இதன் பிரமாண்டமான கதை சொல்லல் மற்றும் உயர் தர அனிமேஷன், திரைத்துறையின் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், 2014-லேயே உயர்-வரையறை ஃபோட்டோரியலிஸ்டிக் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாக்கப்பட்ட கோச்சடையான் திரைப்படம் உருவாக்கப்பட்டது.
இதுதான் இந்தியாவின் முதல் ஃபோட்டோரியலிஸ்டிக் மோஷன் கேப்சர் திரைப்படமாகும் (India's first photorealistic motion capture film). இந்தப் படத்தை இயக்கியர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
எனவே, சமூக ஊடகத்தில் ஒரு ரசிகர் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்தை டேக் செய்து, ``தமிழில் முருகனின் சூரசம்ஹாரம் குறித்து ஒரு அனிமேஷன் படம் எடுத்தால் என்ன?
அது ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் போன்ற தயாரிப்பு ஜாம்பவான்கள் இதை முயற்சிக்கலாம்!

மகாஅவதார் நரசிம்மா படமே இவ்வளவு பணம் வசூலிக்கிறது என்றால், முருகனின் கதைக்கும் அந்த ஆற்றல் உள்ளது!" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த், ``நீங்கள் சொல்வது மிகவும் உண்மை! அனிமேஷனுக்கு அதற்கான அங்கீகாரம் இறுதியாகக் கிடைத்துவிட்டது.
இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று நான் உறுதியாக நம்புகிறேன். இறையருளால், இன்னும் பல அற்புதமான திரைப்படங்கள் வரவிருக்கின்றன! வெற்றி வேல்! வீர வேல்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















