FIFA: சர்ச்சை கோல்... சரித்திர கோல்! ஒரே போட்டியில் கடவுளும் சாத்தானுமாக மாறிய ம...
செங்கல்பட்டு, பொன்விளைந்த களத்தூர்: 3 திருக்கோலத்தில் ஸ்ரீராமர்; ஸ்ரீஹயக்ரீவரின் காலடி பட்ட தலம்!
செங்கல்பட்டு நகரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்விளைந்த களத்தூர். இந்த ஊரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவு பயணித்தால், பொன்பதர்கூடம் தலத்தை அடையலாம்.
இந்தத் தலத்தில் மாபெரும் அற்புதம் ஒன்று சுமார் 700 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. தேசிகன் என்னும் பெருமாள் அடியார் ஒருவர் ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும் வழியில், களத்தூரில் வந்து தங்கினார்.
அவர் ஸ்ரீஹயக்ரீவருக்கு தினமும் பூஜை செய்பவர். ஒருநாள் நைவேத்தியம் படைக்க எதுவும் கிடைக்காததால், துளசி தீர்த்தத்தையே நைவேத்தியம் செய்து, அதையே தானும் பருகிவிட்டு உறங்கினார்.
அன்று இரவு... விவசாயி ஒருவர் தன் வயலில் வெள்ளைக் குதிரை ஒன்று மேய்வதைக் கண்டார். அதைத் துரத்திக்கொண்டே ஓட அந்தக் குதிரை, மகாதேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது.
சப்தம் கேட்டு எழுந்த தேசிகனிடம், விவசாயி விஷயத்தைக் கூற, மகாதேசிகனுக்கு மெய் சிலிர்த்தது. களத்தை மேய்ந்தது சாதாரணக் குதிரை அல்ல... சாட்சாத் ஹயக்ரீவரே என்று உணர்ந்த மகாதேசிகன், உடனடியாக அந்த விவசாயியின் நிலத்துக்குச் சென்றார்.

அங்கே... வெள்ளைக் குதிரை மேய்ந்த இடங்களில் எல்லாம் நெல்மணிகளுக்குப் பதிலாக பொன்மணிகள் விளைந்திருந்தனவாம். களத்தில் (வயலில்) பொன் விளைந்ததால், அந்த ஊருக்குப் பெயர் - பொன்விளைந்த களத்தூர் என்றானது.
அந்தப் பொன்னின் பதர்கள் காற்றில் பறந்து வந்து விழுந்த இடம், பொன்பதர்க் கூடம் எனப் பெயர் பெற்றது. அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் மிகவும் பழைமையான இரண்டு ஆலயங்கள் உள்ளன.
ஒன்று ஸ்ரீநரசிம்மர் ஆலயம். மற்றொன்று ஸ்ரீராமர் ஆலயம். நாம் இரண்டையும் ஒன்றாகக் கருதி தவறாமல் வழிபட வேண்டும்.
இங்கு ஸ்ரீநரசிம்மர் ஸ்ரீஅஹோபிலவல்லித் தாயார் சமேதராக அருள்கிறார். முற்காலத்தில் இந்த மூர்த்தி மாமல்லபுரத்தில் இருந்தவராம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் அந்நியர்களால் மாமல்லபுரத்துக்கு ஆபத்து வந்தபோது, ஸ்ரீநரசிம்மரே அசரீரியாக தன்னை மேற்கு நோக்கிக் கொண்டு செல்லும்படியும், கூடவே பறந்து வரும் கருடன் எங்கே தரை இறங்குகிறதோ, அங்கே கோயில் கட்டித் தன்னை பிரதிஷ்டை செய்யும்படியும் அருளினாராம். இங்கே ஸ்ரீஹயக்ரீவருக்கும் சந்நிதி உள்ளது.
கருவறைக்கு அருகில் இடப்புறம் உள்ள சந்நிதியில், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீலட்சுமணர் சமேதராகத் தரிசனம் தருகிறார் ஸ்ரீகோதண்ட ராமர். அருகிலேயே இவர்களின் உற்ஸவ மூர்த்தங்களும் உள்ளன.
இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ளது ஸ்ரீபட்டாபிராமர் ஆலயம். இந்தக் கோயிலில் நின்ற கோலம், அமர்ந்த கோலம் மற்றும் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீராமரைத் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலவர் ஸ்ரீபட்டாபிராமர் சீதாதேவியை இடது மடியில் தாங்கி அமர்ந்தபடி, பட்டாபிஷேகக் கோலத்தில் அருள்கிறார்.
பொதுவாக ஸ்ரீராமருக்கு வலப்புறம் சீதாதேவியும், இடப்புறம் ஸ்ரீலட்சுமணனும் இருப்பார்கள். ஆனால் இங்கே, பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவதால்... ஸ்ரீராமருக்கு இடப்புறம் சீதையும், வலப்புறம் லட்சுமணரும் அருள்கின்றனர். அருகில், ஆஞ்சநேயரும் உள்ளார்.
Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27
ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்
இணைய க்ளிக் செய்க...https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

இதே கோயிலில் தனிச்சந்நிதியில் அருள்கிறார் சேதுமாதவர். சேது பாலம் கட்டுவதற்கு முன்னர், சமுத்திர ராஜனின் அனுமதியைப் பெற விரும்பினார் ஸ்ரீராமர். ஆனால் சமுத்திரராஜனின் வருகைக்காகச் சிறிது நேரம் காத்திருக்க நேர்ந்தது. அந்தத் தருணத்தில் தனது களைப்பைப் போக்கிக் கொள்ள சிறிது சயனிக்க விரும்பினார் ஸ்ரீராமர்.
அண்ணன் தரையில் சயனித்தால் மேனி நோகுமே என்று, தர்ப்பையால் படுக்கை செய்து அதில் அண்ணனைப் படுக்கச் செய்து, தானும் அருகில் காவலுக்கு நின்றாராம் லட்சுமணன்.
தாமதமாக வந்த சமுத்திரராஜன், ஸ்ரீராமரின் துயிலைக் கலைக்க விரும்பாமல், அவரது திருவடி அருகில் காத்திருந்தானாம். இந்த நிகழ்வையொட்டியே, சயனக் கோலத்தில் காட்சி தருகிறாராம் இந்த ராமர்.
அவரது சிரசுக்கு அருகில் லட்சுமணனும், திருவடிக்கு அருகில் சமுத்திரராஜனும் நிற்கிறார்கள். ராமபக்தர்கள் யாவரும் தரிசிக்க வேண்டிய அற்புதக் கோலம்! இந்தச் சந்நிதியிலும் சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமனுடன் ஸ்ரீராமரின் உற்சவமூர்த்தியைத் தரிசிக்கலாம்.
இங்கே சதுர்புஜ ராமர் தனிச்சந்நிதி கொண்டு அருள்கிறார். ராமாவதாரத்தில் ஒருசிலருக்கு மட்டுமே ஸ்ரீராமர் தன்னை மகாவிஷ்ணுவின் அவதாரமாக வெளிப்படுத்தினார். அப்படி அவர் அருளிய இந்தத் திருக்கோலத்தை இத்தலத்தில் சேவிக்கலாம்.
மேலிரு கரங்களில் சங்கு-சக்கரமும்; கீழிரு கரங்களால் அபய- வரதமும் காட்டி அருள்கிறார் மூலவர். ஸ்வாமியின் வலப்புறம் சீதா தேவி. இடப்புறம் லட்சுமணன். சீதாதேவிக்கு வலப்புறம்... திருவடியைச் சற்றே முன்வைத்து, வாய் பொத்தி பவ்யமாகக் காட்சி தருகிறார் அனுமன்.
ஸ்ரீராமர், மஹாவிஷ்ணுவாகக் காட்சி தந்த தலமாதலால் ஸ்வாமியின் மார்பில் ஸ்ரீமகாலட்சுமி உறைந்திருப்பதைக் காணலாம். உத்ஸவர் கோதண்டராமரும் சதுர்புஜங்களுடன், இடது திருவடியை சற்றே முன்புறமாக மடித்த நிலையில் அருள்வது விசேஷம்.

இங்கு வந்து வழிபட, திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர். இதற்காக ஸ்ரீராமருக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர் பக்தர்கள். தர்மிஷ்டர் என்னும் மகான், இந்தத் தலத்தில் உள்ள தேவராஜ புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீசதுர்புஜ கோதண்ட ராமரை வழிபட்டு, தனது சரும நோய் நீங்கப் பெற்றார்.
எனவே, சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து ஸ்ரீராமருக்கு துளசி, கல்கண்டு நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ள, விரைவில் நலம் பெறலாம் என்கின்றனர்.
தைப்பொங்கல் தினத்தன்று சுவாமிக்கு மிக விமர்சையாகத் திருமஞ்சனம் நடை பெறும். அன்று, சூரிய குலத்தில் பிறந்தவரான ஸ்ரீராமன் பாரிவேட்டைக்குச் செல்வாராம். அதேபோல், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா சுதர்ஸன ஹோமமும் விசேஷம். ஸ்ரீராமநவமி உற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் தவறாமல் இத்தலத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.





















