ஆரண்ய காண்டம்: `அந்தக் காட்சிக்கு மட்டும் 15 டேக் எடுத்தேன்.!' - 'சுப்பு' யாஸ்மி...
சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.30 லட்சம் பறிப்பு; பட்டதாரிகள் போலீஸில் சிக்கிய பின்னணி!
சென்னை வேளச்சேரி, காந்தி நகரில் வசித்து வருபவர் உத்தம்சன் (65). இவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரின் சொந்த மாநிலம் ராஜஸ்தான். ஜவுளி வியாபாரத்தோடு பழைய தங்க நகைகளை வாங்கும் பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் தனியார் நகை அடமானம் நிறுவனத்தில் வேலை செய்யும் சென்னையைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உத்தம்சனுக்கு பழைய தங்க நகைகளை விற்பவர்கள் குறித்த விவரங்களை தெரிவித்து அதற்கு ஏற்ப கமிஷன் வாங்கி வந்தார். மார்ச் 11-ம் தேதி உத்தம்சன்னை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னிடம் 200 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் அதை விற்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். உடனே உத்தம்சன், என்னுடைய செல்போன் நம்பரை யார் கொடுத்தது என விசாரித்திருக்கிறார். அப்போது அந்த நபர், சேலையூரில் உள்ள தனியார் நகைகளை அடகு வைக்கும் நிறுவனத்தில் உள்ள ஒருவர் உங்களுடைய நம்பரை கொடுத்தார் என்று பதிலளித்திருக்கிறார். அதன் பிறகு பழைய தங்க நகைகளுக்கான விலையை பேசி இருவரும் முடித்த நிலையில், அன்றைய தினம் மாடம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்துக்கு வரும்படி அந்த நபர் கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து உத்தம்சன், 30 லட்சம் ரூபாயை பைக்கில் எடுத்துக் கொண்டு தங்க நகைகளை வாங்க வேளச்சேரியிலிருந்து புறப்பட்டிருக்கிறார். மேடவாக்கம் பகுதியில் சென்ற போது உத்தம்சனின் பைக் பழுதடைந்தது. அதனால் பைக்கை அங்கேயே நிறுத்தி விட்டு தனக்கு ஏற்கெனவே அறிமுகமான தனியார் நகை அடமானம் வைக்கும் நிறுவன ஊழியர் சதீஷிக்கு போன் செய்து விவரத்தைக் கூறியிருக்கிறார் உத்தம்சன். இதையடுத்து சதீஷ், பைக்கில் உத்தம்சன்னை அழைத்துக் கொண்டு மாடம்பாக்கம் மின்வாரிய அலுவலகம் பகுதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் உத்தம்சன், சதீஷை கத்தி முனையில் மிரட்டியதோடு இருவரையும் தாக்கிவிட்டு 30 லட்சம் ரூபாயை வழிபறி செய்து விட்டு தப்பிச் சென்றது. அதனால் அதிர்ச்சியடைந்த உத்தம்சன், சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சேலையூர் உதவி கமிஷனர் கிறிஸ்டி ஜெயசீலன் புகார் கொடுத்த உத்தம்சன், அவருடன் சென்ற சதீஷ் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார். அதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடதுக்குச் சென்று போலீஸார் விசாரித்தனர். சி.சி.டி.வி இல்லாத இடம் என்பதால் பணத்தை வழிப்பறி செய்தது யாரென்று தெரியவில்லை. அதனால் உத்தம்சன்னிடம் நகைகளை விற்பதாக தொடர்பு கொண்டவரின் செல்போன் நம்பரை கொண்டு போலீஸார் விசாரித்தனர். அப்போது அந்த செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. அதனால் அந்த செல்போன் நம்பர் யாருடைய பெயரில் இருக்கிறது என விசாரித்தபோது ஒருவருடைய தகவல் கிடைத்தது. அவரை பிடித்து விசாரித்தபோதுதான் பணம் பறிக்க போடப்பட்ட பிளான் முழுமையாக போலீஸாருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார், ரெக்ஸ் விக்கி, கார்த்திக், அற்புதம் ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சேலையூர் போலீஸார் கூறுகையில், ``இந்த வழக்கில் சிக்கிய ஜெயக்குமாரும் ரெக்ஸ் விக்கியும் பட்டதாரிகள். இருவரும் நண்பர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்ட இவர்கள், தங்களுக்குத் தெரிந்த கார்த்திக், அற்புதம் ஆகியோரிடம் ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது ஜெயக்குமார், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேளச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் உத்தம்சன்னிடம் தங்க நகைகளை விற்றிருக்கிறார். அப்போது அவர், தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்து யாராவது தங்க நகைகளை விற்க வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதை மனதில் வைத்துக் கொண்டு பட்டதாரியான ஜெயக்குமார், தன்னுடைய நண்பர்கள் மூலம் உத்தம்சன்னை வரவழைத்து பணம் பறித்திருக்கிறார். பின்னர் அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து மது விருந்து கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் நாங்கள் அவர்களைப் பிடித்துவிட்டோம். பிடிப்பட்ட கார்த்திக் மீது கொலை வழக்கும் அற்புதம் மீது குற்ற வழக்கும் உள்ளது" என்றனர்.




















