சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே! டீ ரூ.10, சமோசா, வடை ரூ. 20!
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலிவு விலை கஃபேவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்துவைத்தார்.
நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உணவகங்களை திறக்க வேண்டுமென்றால் அதிகளவிலான வாடகைத் தொகை செலுத்த வேண்டும்.
இதனால், விமான நிலையங்களில் தண்ணீர் முதல் உணவு வரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. முதல்முறையாக விமானத்தில் செல்பவர் என்றால் உணவு வகையில் விலைப்பட்டியலை பார்த்து மயங்கிவிடுவார்கள்.
தண்ணீர் பாட்டல் ரூ. 125, இட்லி ரூ. 250, பிரியாணி ரூ. 450 என தலைசுற்றும் அளவு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, விமானத்துக்குள் 100 மி.லி. மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க : தோனியின் ’மோர்ஸ் கோட்’ டீ-சர்ட்! அப்படியென்றால் என்ன?
இந்த நிலையில், பயணிகளுக்கு குறைந்த விலை டீ, காபி, தண்ணீர் மற்றும் திண்பண்டங்களை விற்பனை செய்யும் ’உடான் யாத்ரி கஃபே’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
கொல்கத்தா விமான நிலையத்தில் முதல் கஃபே திறக்கப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்திலும் இன்று திறக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நடத்தும் இந்த கஃபேவில் தண்ணீர் ரூ. 10, டீ ரூ. 10, காபி ரூ. 20, சமோசா, வடை உள்ளிட்டவை ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தால் விமான பயணிகள் பலரும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.