சென்னையில் கழிப்பறைகளைப் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம்! - உறுப்பினர்கள் எதிர்ப்பு!
சென்னையில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.
ஏற்கெனவே சென்னையில் 372 இடங்களில் உள்ள 3,270 கழிப்பறை இருக்கைகளை பராமரிக்க தனியாரிடம் ரூ. 430 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ராயபுரத்தில் 2,159 கழிப்பறைகள், திருவிக நகரில் 958 கழிப்பறைகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கழிப்பறை இருக்கைக்கு ரூ. 364 செலவு என்ற வகையில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ரூ. 1,200 கோடி செலவில் சென்னையில் அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி பராமரித்தால் இவ்வளவு செலவு இருக்காது, இதற்காக ஒதுக்கும் நிதி அதிகமாக இருக்கிறது என்று கூட்டத்தில் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஹிந்தி, எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது தெரியுமா? - முதல்வர் மு.க. ஸ்டாலின்
மேலும், வணிக வளாகக் கடைகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வணிக வளாகக் கடைகளுக்கான மாத வாடகையை ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 12% அபராதம் விதிக்கப்படும்.
வணிக வளாகக் கட்டடங்களின் குத்தகை காலம் 9 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 15% வாடகை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இனி ஆண்டுக்கு 5% மட்டுமே உயர்த்தப்படும்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 127 வணிக வளாகங்களில் உள்ள 5,914 கடைகளுக்கும் மாதம் ரூ. 180 கோடி வசூல் செய்யப்படுகிறது.