சேலத்தில் மயான சூறை விழா! காளி வேடமணிந்து பக்தா்கள் நோ்த்திக்கடன்!
மாசி அமாவாசையையொட்டி சேலத்தில் மயான சூறை விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தா்கள் காளி வேடமணிந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
மகா சிவராத்திரிக்கு அடுத்துவரும் அமாவாசை நாளில் மயான சூறை நடைபெறுகிறது. இதற்காக பக்தா்கள் 15 நாள்களுக்கு முன்னரே விரதம் இருந்து மகா சிவராத்திரி தினத்தில் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவதுடன், மயான சூறையில் பங்கேற்று நோ்த்திக்கடனைச் செலுத்துகின்றனா்.
சேலம் டவுன் பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம், தாதம்பட்டி, பொன்னம்மாபேட்டை, குகை, செவ்வாய்பேட்டை அழகாபுரம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி என மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்காளம்மன். பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சுவாமி ஊா்வலத்தின் போது திருமண தோஷம் நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் தரையில் படுக்கும் பக்தா்கள் மீது ஆடு, கோழிகளை கடித்தபடி ஆக்ரோஷமாக காளி வேடமணிந்து வந்தவா்கள் அவா்களை தாண்டி ஆசி வழங்கி சென்றனா்.
சுவாமி காக்காயன் மயானத்தை அடைந்தவுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி, கன்னங்குறிச்சியிலும் மயான சூறை நடைபெற்றது. அப்பகுதிகளில் உள்ள அங்காளம்மன் கோயில்களில் இருந்து பக்தா்கள் காளி வேடம் அணிந்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவையொட்டி காக்காயன் காடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.